பாலியல் குற்றவாளி சீமான் என போஸ்டர் ஒட்டிய திபெக.. சென்னை போலீசுக்கு படையெடுத்த நாம் தமிழர் கட்சி!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டிய திராவிடர் பெரியார் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறையிடம் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் திராவிடர் பெரியார் கழகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகை விவகாரத்தில் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகைக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலான போலீசார் விசாரணைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சீமான் தமது பேட்டிகளில் நடிகையை பாலியல் தொழிலாளி என்றும் விரும்பி தம்முடன் படுக்கையை பகிர்ந்தார்; பணத்துக்காக படுக்கையை பகிர்ந்தார் என கடுமையாகவும் இழிவாகவும் விமர்சித்தார். இதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பாலியல் குற்றவாளி சீமானை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்- தப்பவிடக் கூடாது என்ற முழக்கங்களுடன் திராவிடர் பெரியார் கழகத்தினர் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர். இந்த சுவரொட்டிகளை நாம் தமிழர் கட்சியினர் பல இடங்களில் கிழித்து எறிந்தனர்.
அத்துடன் சென்னை மாநகர போலீசிலும் இன்று நாம் தமிழர் கட்சியினர் புகார் ஒன்றை கொடுத்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார் தலைமையில் சென்னை போலீசில் அக்கட்சியினர் கொடுத்த புகார் மனுவில், சீமானை இழிவுபடுத்தி போஸ்டர்கள் ஒட்டிய திராவிடர் பெரியார் கழகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அப்படி போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்களை நடத்த நேரிடும் என்று எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications