பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ஆய்வு.. அதிகாரபலத்தை காண்பிக்கும் முயற்சி.. கொந்தளிக்கும் சீமான்!
பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ஆய்வுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், பிபிசி-யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல், வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு அதிகாரப் பலத்தைக் காண்பிக்க முற்படுவது குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.
2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஊடகம் இரு பகுதிகளாக ஆவணப்படங்களை வெளியிட்டது. குஜராத் கலவரத்தின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் கலவரத்தில் மோடி குறித்தும் ஆவணப்படம் கேள்வி எழுப்பியது சர்ச்சையானது.
இதனையடுத்து நாடு முழுவதும் பிபிசியின் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள், இந்த ஆவணப்படத்தை நாடு முழுவதும் ஒளிபரப்பி வருகின்றனர்.

பிபிசி அலுவலகத்தில் ஆய்வு
இந்த நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களுக்கு நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சென்றனர். இதனால் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. பின்னர் வருமான வரி தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிகார முறைகேடு
அந்த வகையில் பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும்.

பழிவாங்கும் நடவடிக்கை
குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். உலகப்புகழ் பெற்ற ஊடகமான பிபிசி-யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடைவிதித்த மத்திய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.

கண்டனம்
வருமானவரித்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், ஜனநாயகவாதிகளையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications