உண்ணாவிரத போராட்டம்.. அதிமுகவிற்கு நாம் தமிழர் ஆதரவு! ஜனநாயகத்திற்கு துணை நிற்போம்.. சீமான் பரபர
சென்னை: அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் இருந்து அதிமுகவினர் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது.எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு ஜனநாயக படுகொலை. பாஜவின் ஜனநாயக விரோத செயல்பாட்டை அப்படியே திமுக பின்பற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 60 பேர் பலியாகியுள்ளனர். 50 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் இன்னும் 40க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் நீதியரசர் கோகுல்தாசின் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டசபையில் விவாதிக்க கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பற்றி விவாதிக்க கோரி கேள்வி நேரத்தில் போது அமளி செய்து வந்தனர். இதனால் சட்டசபை மாண்பை குலைத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சபையில் பங்கேற்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றும் சட்டசபையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், சட்டசபையில் இருந்து அதிமுகவினர் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், பாஜவின் ஜனநாயக விரோத செயல்பாட்டை அப்படியே திமுக பின்பற்றுகிறது என்றும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான சனநாயகப்படுகொலையாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, சனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் உண்மை நிலவரம் தெரிய வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். ஏனென்றால் கள்ளக்குறிச்சி ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அதிகாலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லக்கூடாது என்று ஒரு புதிய விளக்கத்தை அமைச்சர் முத்துசாமி கொடுக்கிறார்" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications