அதிமுக வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும்... சீமான் கடும் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் அதிமுக அரசு இணைந்தால் அந்தக் கட்சி வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை முகமாக மாற்ற மத்திய பாஜக அரசு துடியாய் துடித்து வருவதாகவும், அதற்கான முன்நகர்வாகவே இது போன்ற திட்டங்களை உட்புகுத்தி கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்குவதாகவும் சாடியுள்ளார். தமிழகத்தை வட இந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்ற ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் பயன்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே லட்சக்கணக்கான வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் புகுந்த வாக்குரிமையை பெற்று தமிழர்களின் அரசியலை பங்கிட்டு வரும் சூழலில், இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் தமிழர்கள் பெரிய அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் எனக் கூறியிருக்கிறார்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் முழுக்க முழுக்க தமிழர்களின் உணவுச் சுரண்டலுக்கும், உரிமைப்பறிப்புக்குமே வழிவகுக்கும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்வது மிகப்பெரிய மோசடித்தனம் எனவும் தாக்கியுள்ளார். பாஜக அரசின் பாசிச நடவடிக்கைக்கு அதிமுக அரசு துணை போகும் செயல் தமிழர்களுக்கு செய்யும் பச்சைத்துரோகம் என சீமான் சாடியுள்ளார்.
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் பேராபத்தை உணர்ந்து, தமிழக அரசு அதை எதிர்க்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சீமான்.












Click it and Unblock the Notifications