ஒரே ஆண்டில் ஓஹோ ரிசல்ட்.. அசத்திய தமிழ்நாடு அரசு! இன்று நான் முதல்வன் திட்ட ஓராண்டு வெற்றிவிழா
சென்னை: தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில், "நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2054, ஆடித் திங்கள் 22 ஆம் நாள், 07.08.2023 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் 13 இலட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து சிறப்பாக செயல்படும் நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
"நான் முதல்வன்" திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தொழில் துறையின் தேவை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இத்திட்டத்தின் மூலம் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி பாடத்திட்டத்தில் உள்ள வழக்கமான பாடப் பிரிவுகளுடன் சேர்த்து மாறி வரும் தொழில் நுட்ப உலகிற்கேற்ற திறன் படிப்புகளை வழங்குவதே "நான் முதல்வன்". துறை சார்ந்த வல்லுநர்கள் உதவியுடன் பிரத்யேக திறன் சார் பாடங்களை வடிவமைத்து, கல்லூரி பாடத் திட்டத்துடன் சேர்த்து அவர்கள் படிக்கும் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
இதன் மூலமாக ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெற்று தரும் முகாம்கள் கல்லூரி வளாகங்களிலேயே நடைபெறுகின்றன. பொறியியல் கல்லூரிகளில் 2022-23 கல்வியாண்டில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 59,132 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக 2,48,734 இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களின் திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை நடைபெற்றுள்ள வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 62,634 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
MSME, ELCOT, DISH, CII, TIDCO, SIPCOT, Employment, StartupTN, Guidance TN, FICCI, NASSCOM போன்ற அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மேலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications