காமராஜர் பற்றி அவதூறு.. ஆ ராசாவுக்கு எதிராக நாடார் பேரவை சென்னையில் ஆர்ப்பாட்டம்..அதிமுக, பாஜக ஆதரவு
சென்னை: திமுகவின் துணை பொருளாளரான பொதுச்செயலாளரான நீலகிரி எம்பி ஆ ராசா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி பேசினார். அப்போது காமராஜர் குறித்து அவதூறான கருத்துகளை கூறிய அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான் திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், பாஜகவின் மாநில துணை தலைவர் நாகராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்கம்) சார்பில் கடந்த மாதம் பொங்கல் விழா நடந்தது. இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார்.
இந்த விழாவில் அவர் பேசியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் காமராஜர் குறித்து அவர் கூறிய விஷயங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆ ராசா பேசியது என்ன?
அந்த வீடியோவில், ‛‛காமராஜர் பல அணைகளை கட்டினார். இருப்பினும் கூட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க முடியவில்லையே. அது அவருக்கு மிகப்பெரிய குறைபாடாக போய்விட்டது. காமராஜருக்கு எத்தனையே பெருமைகள் உண்டு. 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் தலைவர். 2 பிரதமர்களை உருவாக்கியவர். பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் என பல பெருமைகள் உள்ளது.

சர்ச்சைக்கான காரணம் என்ன?
காமராஜர் தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர். பெரியாருக்கு பச்சை தமிழர் என அடையாளம் கொடுத்தவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தமிழ்நாடு என்ற பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கி உள்ளது'' என தெரிவித்து இருந்தார். இதில் தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்கவில்லை என ஆ ராசா கூறியது உண்மைக்கு புறம்பானது. இது காமராஜர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் ஆ ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடார் அமைப்பினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. மேலும் இன்று சென்னை வள்ளவர் கோட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பெருந்தலைவர்கள் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் பங்கேற்று பேசினார்.

அதிமுக, பாஜக ஆதரவு
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பங்கேற்றார். பாஜக சார்பில் மாநில துணை தலைவர் கரு நாகராஜன் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆ ராசாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு, அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications