அரசியல் பற்றி பேசமாட்டேன்! ஆளவிடுங்க! திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்!
சென்னை: அரசியல் பற்றிய கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் நோ பாலிடிக்ஸ் என்று கமெண்ட் அடித்தும் செய்தியாளர்களிடம் இருந்து நழுவிக்கொண்டார் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்.
இந்திய பொருளாதாரம் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வியை வீசியவுடன், நான் ஆளுநர் பதவியிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிறைய பேசுவோம் எனக் கூறி அந்தக் கேள்வியையும் தவிர்த்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற இல.கணேசன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
நாகலாந்து ஆளுநர் இல.கணேசனை பொறுத்தவரை தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராவார். வெறுப்பு அரசியலை முன்னெடுக்காமல் ஆரோக்யமான போட்டிகளின் அடிப்படையில் அரசியல் செய்தவர் கணேசன்.
இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என்ற போதிலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களிடத்தில் நன் மதிப்பை பெற்றிருந்தவராக திகழ்ந்தார்.
இல.கணேசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல கருணாநிதி அவரது வீடுத் தேடிச் சென்ற நிகழ்வெல்லாம் கூட ஒரு காலத்தில் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு நாகரீக முறையில் அரசியல் செய்து வந்தார்.
இந்நிலையில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல.கணேசன் அண்மையில் நாகலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்களும் உண்டு.
இதனிடையே திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற அவரை அங்கு செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கொஞ்சம் கூட பதற்றமின்றி ''எல்லோரும் நல்லா இருக்கீங்களா, சந்தோஷம், உங்களை எல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி'' எனத் தொடங்கி அரசியல் பற்றிய கேள்விக்கு ஒரே வார்த்தையில் ''நோ கமெண்ட்ஸ்'' என பஞ்ச் அடித்தார்.
ஆளுநர் பதவியிருந்து தாம் ஓய்வு பெற்ற பிறகு பொருளாதாரம், அரசியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் நிறைய பேசுவோம் எனக் கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.












Click it and Unblock the Notifications