எனக்கு 6 முறை அழைத்தாரா? ஆதாரம் இருக்கா.. ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 6 முறை தொலைப்பேசியில் அழைத்த போதும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி ஓபிஎஸ் குறை சொல்லி இருந்தாலும், அவரைப் பற்றி எந்தக் குறையும் நான் சொல்லப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கோரிய நிலையில், கடைசி வரை பாஜக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. நயினார் நாகேந்திரனிடம் மோடி - ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதற்கு நயினார் நாகேந்திரன், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார். மோடியை சந்திக்க முடியாததால், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் தரப்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதன்பின் ஓபிஎஸ் நேராக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார்.
அப்போது நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று தொலைப்பேசி வாயிலாக கேட்டிருந்தேன். ஆனால் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துவிட்டார். எங்களிடம் கூறி இருந்தாலே, மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்போம். அவர் விருப்பப்பட்டால் ஆகஸ்ட் 26ல் தமிழகம் வரும் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி இருந்தார்.
இதற்கு ஓபிஎஸ் தரப்பில், நயினார் நாகேந்திரனை 6 முறை தொடர்பு கொண்டும் அவர் தொலைப்பேசியை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார். ஓபிஎஸ் அனுப்பிய மெசேஜையும் அவர் பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து மீண்டும் நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த கடிதம் என்னிடம் வந்து சேரவில்லை. ஒருவேளை கடிதம் வந்து சேர்ந்தால் கண்டிப்பாக எடுத்துக் காட்டுகிறேன். அப்போது யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் திடீரென முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட முடியாது.
அதனால் ஏற்கனவே தொடர்பு இருந்திருந்தால் மட்டுமே இப்படியான முடிவை எடுத்திருக்க முடியும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. அதனால் ஓபிஎஸ் தரப்பைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஓபிஎஸ் முடிவு எடுத்ததற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். அவ்வளவுதான். என்னை 6 முறை தொலைப்பேசியில் அழைக்கவில்லை. அவர் சொல்லுவது மட்டுமே ஆதாரமாக இருக்கும்.
அவரிடம் வேறு ஆதாரம் இருக்காது. நான்தான் அவரை தொடர்பு கொண்டேன். ஸ்டாலினை சந்திப்பதற்கு முதல் நாள் அவரை அழைத்தேன். அதேபோல் சட்டசபை நடக்கும் போதும் பலமுறை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறோம். ஆனால் இம்முறை எனது உதவியாளர்கள் யாரும் ஓபிஎஸ் அழைத்ததாகச் சொல்லவில்லை. இதனை ஒரு குறையாக ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார். ஆனால் நான் அவரைப் பற்றி குறையாகச் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications