பாஜகவின் தமிழ் மாநில தலைவராக தேர்வாகும் நயினார் நாகேந்திரன்! யார் இவர்? முழு விவரம்
சென்னை: பாஜகவின் 10வது தமிழ் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் யார் இந்த நயினார் நாகேந்திரன்? பாஜகவில் சேர்ந்து 10 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அவர் எப்படி தலைவர் பொறுப்பு வரை உயர்ந்தார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அரசியல் அறிமுகம்
நயினார் நகேந்திரன், திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை ஒட்டியுள்ள தண்டையார் குளம் பகுதியை பூர்வீகமாக கொண்டவராவார். முதுகலை பட்டம் பெற்ற இவருக்கு அரசியல் அதிமுக மூலமாகத்தான் அறிமுகமாகியது. எம்ஜஆர், ஜெயலலிதாவின் ஆளுமையினால் ஈர்க்கப்பட்டுதான் அரசியலில் அவர் நுழைந்ததாக பல முறை கூறியிருக்கிறார். 1989ம் ஆண்டுதான் இவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இவர் தன்னை இணைத்துக்கொண்டு பணிகளை தொடர்கிறார்.
கழக பணிகள்
கல்வியில் தேர்ச்சி, அரசியல் சாதூர்யம், சுழன்று செய்யும் களப்பணி, மாற்று கட்சி தலைவர்களுடனும் நட்பு பாராட்டுதல் என அனைத்தும் சேர்த்து இவரை அதிமுகவில் முக்கிய புள்ளியாக உயர்த்தியது. முதலில் மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் ஜெயலலிதா பேரவையின் செயலாளர் பொறுப்பில் அங்கம் வகித்த இவர், அடுத்தடுத்து அதிமுக தேர்தல் பிரிவு இணை செயலாளர் என உயர்கிறார். இவரது வளர்ச்சியை பார்த்த கட்சித் தலைமை 2001ல் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பை வழங்குகிறது.
வாய்பை பயன்படுத்திய நயினார்
கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் அத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி வாகை சூடுகிறார். அப்புறம் என்ன? ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி இவரை தேடி வருகிறது. தொடர் வெற்றியில் இருந்த இவருக்கு 2006 சட்டமன்ற தேர்தல் சோதனை காலமாக அமைகிறது. இந்த முறையும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கொண்டிருந்த அவருக்கு தோல்வி பரிசாக கிடைக்கிறது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 606 ஓட்டுகளில்தான் வெற்றி பெற்றார்.
வெற்றியும் தோல்வியும்
எனவே நயினார் நம்பிக்கையை கைவிடவில்லை. 2011ல் மீண்டும் சீட் கேட்கிறார். கட்சி தலைமை யோசிக்கிறது. ஆனால், கடந்த தேர்தலில் வெற்றி விகிதம் சில நூறு என்பதால் கட்சி வாய்ப்பளிக்கிறது. வாய்ப்பை பயன்படுத்துகிறார். திருநெல்வேலி இந்த முறை அவரை கைவிடவில்லை. வெற்றிவாகை சூடுகிறார். இந்த முறை திமுக வேட்பாளர் டபுள் மடங்கு வாக்குகளுடன் வெற்றி பெறுகிறார். ஆனால் கட்சி இவரை அமைச்சரவையில் எடுத்துக்கொள்ளவில்லை.
அதிமுக டூ பாஜக
2016க்காக காத்திருக்கிறார். தேர்தல் வருகிறது. மொத்த உழைப்பையும் உள்ளே கொட்டுகிறார். எல்லாம் சரியாக இருந்தும் அவரால் வெற்றிப்பெற முடியவில்லை. வெற்றி/தோல்வி விகிதம் வெறும் 601 வாக்குகள் மட்டுமே. இது நடந்த கொஞ்ச நாட்களில் ஜெயலலிதா மறைந்து போக, 2017ம் ஆண்டு வாக்கில் நயினார் பாஜகவில் இணைகிறார். பாஜக அவரை அரவணைக்கிறது. 2021ம் ஆண்டு அவர் பாஜக சார்பில் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார். போட்டியில் வெற்றியும் பெறுகிறார்.
புதிய தலைவர்
இப்போது தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் நீடித்து வருகிறார். பாஜக மாநில தலைவருக்கான தேர்தலில் இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இவர் ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.












Click it and Unblock the Notifications