எழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு
சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை, பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தும், தமிழக ஆளுநர் மவுனம் காப்பதாக அவர் தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுதலை செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இந்த பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை. இதனையடுத்து நளினி சென்னை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்த வேண்டும். 7 பேரையும் உடனடியாக முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கும், முதலமைச்சருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்துள்ளதையும் நளினி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இதுதொடர்பாக தாம் அளித்த மனு மீது உரிய முடிவு எடுக்க வேண்டும் என தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். நளினியின் இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சுப்பையா, நீதிபதி கிருஷ்ணன் மற்றும் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
முன்னதாக எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய புலனாய்வு துறையின் ஒப்புதல் பெற வேண்டிய காரணத்தால் இந்த வழக்கானது முடித்து வைக்கப்பட்டது. எனினும் 7 பேரும் அப்போது விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications