போயஸ் தோட்டத்தில் ரஜினியுடன் நமோ நாராயணா சுவாமி திடீர் சந்திப்பு.. மாஸ்க் அணியாததால் ரசிகர்கள் கவலை
சென்னை: போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தை நமோ நாராயணா சுவாமி திடீர் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். அப்போது இருவரும் மாஸ்க் அணியாதது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
அண்ணாத்த சூட்டிங்கில் படக்குழுவினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினி உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் ரஜினிக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எனினும் அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டிஸ்சார்ஜ்
அங்கு 3 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 27-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் நிச்சயம் ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதை அவர் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பதாக இருந்தது.

உடல்நலம்
ஆனால் அவர் மருத்துவர்களின் அறிவுரையை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வர போவதில்லை என அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மனமுடைந்தனர். சில ரசிகர்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை தலைவரின் உடல்நலம் தான் முக்கியம் என்றார்கள்.

வரவேற்பு
இந்த நிலையில் இன்றைய தினம் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு நமோ நாராயணா சுவாமி வருகை தந்திருந்தார். அவரை ரஜினிகாந்தும் லதா ரஜினிகாந்தும் வரவேற்றனர். ரஜினியை ஆசிர்வதித்த சுவாமி சற்று நேரம் ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பில் ரஜினியின் உடல்நலம் குறித்து சுவாமி விசாரித்ததாக தெரிகிறது. அது போல் அரசியல் பற்றி பேசினரா என தெரியவில்லை. ஆனால் இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

ரசிகர்கள் கவலை
இருவரும் மாஸ்க் போடாமல் இருந்தனர். ஏற்கெனவே கூட்டம் கூடும் இடங்களுக்கு சென்றால் ரஜினிக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் அரசியலுக்கே வரமாட்டேன் என்றார். ஆனால் இன்று மாஸ்கே போடாமல் சாமியாருடன் அருகருகே பேசி கொண்டிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications