நாங்குநேரி இரட்டைக் கொலை.. திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவுதான் இந்த கொடூர கொலை - அதிமுக அட்டாக்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் சாலையில் சென்று பொதுமக்களை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளது. இதில், வடமாநிலத் தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த வெட்டுக் காயமடைந்தனர். இந்த கொடூர கொலைச் சம்பவத்துக்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூர சம்பவம்
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம். பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுகவின் அலட்சியப் போக்கு
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள். இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
சமூக மோதல்கள்
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?. தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வெட்கக்கேடு
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது. பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications