மதிமுகவுக்கு ரிட்டர்ன் ஆகிறாரா? போராட்ட களத்தில் துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன்-நாஞ்சில் சம்பத்
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ரக் கழகத்தின் போராட்ட களத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன் என்று நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். இதன் மூலம் மதிமுகவுக்கு மீண்டும் திரும்ப இருப்பதை நாஞ்சில் சம்பத் உறுதி செய்துள்ளார்.
திராவிடர் இயக்க முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போது தாமும் வெளியேறினார். மதிமுகவில் வைகோவின் வலது கரமாக திகழ்ந்தார். மதிமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் நாஞ்சில் சம்பத்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்தார். வழக்குகளை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் கொள்கை பரப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அரசியலுக்கு குட்பை
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டார். ஆனால் தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது திராவிடமும் இல்லை; அண்ணாவும் இல்லை; ஆகையால் அந்த கட்சியில் இருக்க முடியாது என அறிவித்தார். அத்துடன் இனி அரசியலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுமையாக இலக்கிய கூட்டங்களில் கவனம் செலுத்துவேன் எனவும் அறிவித்தார் நாஞ்சில் சம்பத்.

திமுக ஆதரவு
ஆனால் திமுகவின் ஆதரவாளராக, திராவிடர் இயக்க அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்தார் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் திமுகவில் மீண்டும் இணையக் கூடும் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் தாம் அரசியல் கட்சிகளில் இணையப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக கூறினார் நாஞ்சில் சம்பத். அதே நேரத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோனியாகவும் இருப்பேன் என்றார். அந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்துக்கு திமுக கரைவேட்டியை பொன்னாடையாக போர்த்தினார் உதயநிதி.

வைகோ மகனுக்கு பதவி
இந்நிலையில் மதிமுகவின் தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு கூட்டத்தில் வைகோ ரகசிய வாக்கெடுப்பு நடத்தினார். அதேநேரத்தில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, மகனுக்கு கட்சியில் பதவி கொடுத்திருக்கிறார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகிறது. மதிமுகவிலேயே சில மூத்த தலைவர்கள் வைகோ மகன் துரை வைகோவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

நாஞ்சில் சம்பத் ஆதரவு- மீண்டும் மதிமுகவில்?
தற்போது மதிமுகவுக்கு ஆதரவாகவும் வைகோ மகன் துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததை நியாயப்படுத்தியும் நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத், வைகோ திமுகவில் இருந்து வாரிசு அரசியலால் வெளியேறவில்லை. அது ஒரு வரலாற்று அரசியல். மதிமுக பூகம்ப வேகத்தைவிட வேகமாக செயல்படக் கூடிய இயக்கம். அது போராடப் பிறந்தது. மதிமுகவின் போராட்ட களத்தில் தம்பி துரை வைகோவுக்கு இந்த நாஞ்சில் சம்பத் துணையாக நிற்பேன் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் மீண்டும் மதிமுகவுக்கு நாஞ்சில் சம்பத் திரும்பலாம் என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications