அரசியல் அனாதை ஆவார் எடப்பாடி! விளாசிய நாஞ்சில் சம்பத்.. ஓபிஎஸ், சசிகலா பற்றி என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
கடந்த 2018ஆம் ஆண்டு கடலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது குறித்து அப்போது வழக்கு தொடரப்பட்டது. கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக நாஞ்சில் சம்பத் கடலூரில் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
பரப்புறது எல்லாம் பொய் செய்தி.. வீடியோ.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
நாஞ்சில் சம்பத்
கடலூரில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர் என்று நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கை வைத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசியலில் இவரால் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது.
அரசியல் அனாதை
மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அரங்கேற்றிய நாடகம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வெகு சீக்கிரம் தமிழ்நாட்டு அரசியலில் எடப்பாடி பழனிசாமி அனாதை ஆவார் எனக் கூறினார். ஓபிஎஸுக்கு அதிமுகவைக் காக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது. சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையிலேயே அவர் உள்ளார்.
சசிகலா
அதிமுகவை உயிர்த்துடிப்போடு நடத்தும் வலிமை சசிகலாவுக்குத் தான் உள்ளது. உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு அவரது பிறந்தநாளுக்குக் கொடுக்கப்பட்ட பரிசாக உள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள். சசிகலா தலைமையில் அதிமுக சென்றால் தான் அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கும். கட்சியைத் தலைமை தாங்கும் எந்த தகுதியும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்
இன்னும் எத்தனை நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் எனப் பார்க்கலாம். அவருக்குச் செல்வாக்கு இல்லை என்று தெரிந்தால் எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் நிச்சயம் வருவார்கள். அதிமுக பலவீனப்பட வேண்டும் சிதைய வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். அதிமுகவுக்குள் ஊடுருவி அதை அழித்துவிட்டு அங்கு வரவேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்திற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளார்.
டாஸ்மாக் விவகாரம்
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடையை உடனடியாக எல்லாம் மூட முடியாது. அப்படி நடக்க மிகப் பெரிய அளவில் கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும் இதற்கு அரசு மட்டுமின்றி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைவரும் பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் ஏற்கனவே 75% பேர் குடிகாரர்கள் ஆகிவிட்டனர். போதை பழக்கத்தை ஒழிக்க அறம் சார்ந்த திட்டங்கள் தேவை" என்று தெரிவித்தார்.