"புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை! எடப்பாடி தலைமையில் கடைசி பொதுக் குழு" நாஞ்சில் சம்பத் பகீர்
சென்னை: ஐபிஎஸ் படித்த தாம் ஏன் கட்சி தொடங்கக் கூடாது என நினைத்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விரைவில் கட்சித் தொடங்கி விஜய்யுடன் கூட்டணி அமைக்க போகிறார் என மூத்த அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை தனி கட்சியை தொடங்க வாய்ப்பிருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஒரு நபரை போட்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தூத்துக்குடி மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த செல்வம்தான்.

இந்த டிசம்பரில் அண்ணாமலை கட்சி தொடங்க போவதாக சொல்கிறார்கள். இவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. பாஜகவில் அண்ணாமலையின் பதவியை பறித்து, அவர் இடத்தில் நயினார் நாகேந்திரனை அமர்த்தினர். பாஜக தலைவராக மீண்டும் தான்தான் தேர்வு செய்யப்படுவோம் என கருதியிருந்த அண்ணாமலை, தனது பதவி பறிப்பால் மனம் உடைந்துவிட்டார்.
ஐபிஎஸ் படித்த நாம் ஏன் ஒரு கட்சியை ஆரம்பிக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். அண்ணாமலைக்கும் விஜய்க்கும் பொது எதிரி திமுக என்பதால் இருவரும் கூட்டணி அமைத்தால் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வீழ்த்திவிடலாம். அதற்கேற்ப செங்கோட்டையனும் தவெகவுக்கு வந்துவிட்டார். அவரும் அண்ணாமலையும் தொண்டர்களால் எளிதில் அணுகக் கூடியவர்கள்.
செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் என்ன செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே அவரது அரசியலை சரிக்க அண்ணாமலை+ விஜய் கூட்டணி அமைத்தால் வாய்ப்புள்ளது.
அது போல் அதிமுக மேற்கு மண்டலத்தில் மட்டும் இல்லை, தமிழகம் முழுவதும் பேரிடியை சந்திக்கும். எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு தெரிந்து டிசம்பர் 10ஆம் தேதிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் கடைசி பொதுக் குழு. அதன் பிறகு அவர் தலைமையில் பொதுக் குழுவே கூடாது. இதற்கான உள்ளடி வேலைகள் நடந்து வருகின்றன.
அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின் ஓபிஎஸ்ஸும் தவெக கூட்டணிக்கு செல்வார். அதே போல் டிடிவி தினகரனும் விஜய்யுடன் கூட்டணி வைப்பார். இவ்வாறு இத்தனை கட்சிகளுடன் இணைந்து விஜய் தேர்தலை சந்திப்பார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
பேச்சாளரான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அதிமுகவுக்கு வந்தார். அங்கு 2017 ஆம் ஆண்டு வரை இருந்த அவர், அங்கிருந்து 2019ஆம் ஆண்டு திமுகவில் இணைந்துள்ளார். திமுக பேச்சாளராக இருக்கிறார். இவர் திடீரென விஜய் கட்சிக்கு ஆதரவு கரம் நீட்டி வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது போல் அவர் ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூட செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவில் உள்ள ஏராளமான தலைவர்கள் தவெகவுக்கு செல்வார்கள் என்றும், 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளை வெல்வதே கடினம்.
சசிகலா செய்த தவறு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது தான். அதன்பின் எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்தவர்களுக்கே பாவத்தை செய்கிறார். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை தொடர்ந்து செங்கோட்டையனையும் அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். செங்கோட்டையன் ஒருங்கிணைய வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை.
77 வயதில் ஒரு கட்சியில் போய் சேர்ந்து உடனே ஒரு பதவியை வாங்கியது தமிழ்நாடு அரசியலுக்கே புதியது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications