"வீடு தேடி வந்து வாயிலயே வெட்டுவேன்.." மிரட்டிய விசிக பிரமுகர்.. கமிஷனர் ஆபீஸ் விரைந்த பாஜக நாராயணன்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் என கூறிக் கொள்ளும் ஒருவர் எனது வீடு தேடி வந்து வாயிலேயே வெட்டுவேன் என மிரட்டல் விடுப்பதாக காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி புகார் அளித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளராக உள்ளவர் நாராயணன் திருப்பதி. இவர் நிறைய விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளார். அது போல் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

வாயில் வெட்டுவேன்
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்ததாக கூறிக் கொண்ட ஒருவர் வீடு புகுந்து வாயில் வெட்டுவேன் என ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நாராயணன் திருப்பதி புகார் அளித்துள்ளார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பாஜக
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் நாட்டின் பிரதமர் குறித்தும் பாஜக மற்றும் நிர்வாகிகள் குறித்தும் தரம் தாழ்ந்த கருத்துகளை சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுகிறார்கள். அதுகுறித்து ஆதாரங்களுடன் பல புகார்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவல் துறை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என அடையாளப்படுத்திக் கொண்டு தன்னைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் ரீதியில் "வீடு புகுந்து வாயில் வெட்டுவேன்" என்று தில்லை கருணாகரன் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தேன். காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டர் சட்டம்
இவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாஜகவை சேர்ந்த கல்யாணராமன், மாரிதாஸ், கிஷோர் கே சுவாமி போன்றோரை மட்டும் குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என கூறிக் கொள்ளும் ஒருவர் பாஜக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications