மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் மாநாடு.. கூட்டம் திரட்ட தனி குழுவை அமைத்த நயினார் நாகேந்திரன்
சென்னை: பிரதமர் மோடி, வரும் 23 ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு "கூட்டம் திரட்டல் குழு" என ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொன். ராதாகிருஷ்ணன், கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், முருகானந்தம், கார்த்தியாயினி, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 30 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை செய்யப்பட்டது. இதில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணியின் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெற உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்க்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரமாண்ட மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த மாநாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஒரு சேர மேடையேறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி கட்சிகள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார். அதில், "கூட்டம் திரட்டல் குழு" என ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொன். ராதாகிருஷ்ணன், கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், முருகானந்தம், கார்த்தியாயினி, அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மோடி கூட்டத்துக்கான ஆட்களை திரட்டுவதற்கான பணிகளை இந்தக் குழு மேற்கொள்ள உள்ளது.
அதேபோல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் பி செல்வம், உள்ளிட்ட 11 பேர் கொண்ட 'ஏற்பாடுகள் குழு'வையும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். பாஜக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications