வாழ்நாள் முழுக்க இனி இப்படி செய்ய மாட்டேன்.. கோர்ட்டில் பகிரங்க வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர்
சென்னை: தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். இனி வாழ்நாள் முழுதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள உத்தரவாத மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட பாஜகவின் எஸ்வி சேகர், தேசிய கோடியை அவமதிக்கும் விதமாகவும் முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
ஸ்ஸ்ஸப்பா... ஒரே புழுக்கமா இருக்கே.. பெண் செய்த அந்த பகீர் காரியம்.. விக்கித்து போன மக்கள்!
தேசியக்கொடி அவமதிப்பு
இதற்கு எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.
ஜாமீன் மனு தாக்கல்
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறை குற்றச்சாட்டு
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல்வர் தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், எஸ்.வி சேகர் சம்மந்தமின்றி காவி நிறம் இந்துத்துவத்தை குறிக்கும், வெள்ளை நிறம் கிறிஸ்துவத்தை குறிக்கும், பச்சை நிறம் இஸ்லாமியத்தை குறிக்கும் என அவர் சம்மந்தமின்றி ஒரு விளக்கம் கொடுப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கொடியின் மூன்று நிறங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள போது எஸ்.வி சேகர் மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
வருத்தம் கேட்க வேண்டும்
தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
எஸ்.வி சேகர் வருத்தம்
இதனையடுத்து எஸ்.வி. சேகர் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 2ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது,
எஸ் வி சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் பேச மாட்டேன்
அந்த மனுவில்,தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள எஸ்.வி சேகர், தான் இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எஸ்.வி சேகரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.