100 நாள் வேலைத்திட்டம்.. மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்பட்டுள்ளார்.. ப.சிதம்பரம் பேட்டி
சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கு மூலமாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிம்பத்தை கட்டமைக்க முயற்சியில் பாஜக ஈடுபட்டது என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறிய ப.சிதம்பரம், பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய ஏஜேஎல் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இயக்குநர்களாக உள்ளனர். இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக சுப்பிரமணியசாமி 2014ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

ஆனால் எப்ஐஆர் இல்லாமல் தனிநபர் புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஏற்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் நேஷனல் ஹெரால்டு வழக்கு மூலமாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது பாஜகவினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.
இந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சியினருக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சிறந்த தீர்ப்பை அளித்துள்ளனர். பணப் பரிமாற்றம் என்பது குற்றமல்ல.
நாள்தோறும் பணப் பரிமாற்றம் சாமானிய மக்களிடையே நடந்து வருகிறது. ஆனால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்வதே குற்றம். சட்டத்தை மீறிய பணப் பரிமாற்றமே குற்றம். அப்படி நடந்தால், காவல்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த காவல்துறையோ, புலனாய்வுத்துறையோ வழக்கை பதிவு செய்யவில்லை.
எஃப்ஐஆர் இல்லாத ஒரு வழக்கில் அமலாக்கத்துறை ஒரு குற்றத்தை பதிவு செய்தது. இதனை தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அமலாக்கத்துறை சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடக்கவே இல்லை. இந்த வாதத்தை ஏற்று தீர்ப்பு வந்துள்ளது. முதல் குற்றத்தை பதிவு செய்யாமல், 2வது குற்றத்தை விசாரிக்கவே முடியாது. இதனால் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.
இந்த வழக்கில் யாரும் யாருக்கும் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டே இல்லை. யங் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஒரு ரூபாய் கூட பணப் பரிமாற்றம் நடக்கவே இல்லை. பணப் பரிமாற்றம் நடந்தால் தானே எந்த மாதிரியான பணப் பரிமாற்ற குற்றம் நடந்தது என்று சொல்ல முடியும். இத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இந்த வழக்கு மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிம்பம் நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பழிவாங்கும் நடவடிக்கையை இனியும் எடுக்க கூடாது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால், செய்யட்டும். மத்திய அரசுக்கு இன்னும் புத்தி தெளியவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள பெயர் காந்தியின் பெயரை விட பொருத்தமானதா? இந்த திட்டத்திற்கு வைத்துள்ள வாயில் நுழையாத பெயர் இந்தியா? ஆங்கிலமா? இந்த பெயர் நீக்கம் காரணமாக மகாத்மா காந்தி 77 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கொல்லப்பட்டுள்ளதாக என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications