நெல்லை கவின் ஆணவப் படுகொலை விவகாரம்.. டெல்லியில் இருந்து நெல்லைக்கு வரும் முக்கியப் புள்ளி!
சென்னை: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை நெல்லை செல்கிறார். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக விசாரிக்க நாளை நெல்லைக்குச் செல்கிறார் கிஷோர் மக்வானா. அதேபோல, புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலில் பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் நாளை விசாரணை நடத்துகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் பாளையங்கோட்டை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவினை பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுர்ஜித்தின் அக்கா சுபாஷினியை, பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சேர்த்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் இரு பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் பற்றி நேரில் விசாரணை நடத்துவதற்காக தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார். மேலும், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளார். அதன் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.












Click it and Unblock the Notifications