நீட் அனிதா அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போர்ஜரி வீடியோ-அமைச்சர் பாண்டியராஜன் மீது மோசடி புகார்
சென்னை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற போர்ஜரி வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
Recommended Video
2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் அரியலூர் மாணவி. ஆனால் நீட் தேர்வு முறை அனிதாவை தற்கொலை செய்ய வைத்தது.
துணிச்சலுடன் போராடிய அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே துயரத்தில் உறைய வைத்தது. இப்போது அனிதாவை பயன்படுத்தி அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள போர்ஜரி வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2017-ம் ஆண்டு உயிரிழந்த அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல அந்த வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார் அமைச்சர் பாண்டியராஜன். இதனால் அனிதா குடும்பத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.
இந்த போர்ஜரி வீடியோ தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் இறந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் அமைச்சர் பாண்டியராஜன்.
ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது மாதிரி ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து பிரசாரம் செய்து சர்ச்சையில் சிக்கியவர் மாஃ.பா பாண்டியராஜன். இப்போது இறந்த அனிதாவை கொச்சைப்படுத்தி உள்ளார். இப்படியானவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வலியுறுத்தி உள்ளார்.
ட்வீட்டை டெலீட் செய்த அமைச்சர்
இதனிடையே இறந்த அனிதாவை அவமதிக்கும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் போர்ஜரி வீடியோவை வெளியிட்ட பதிவுகளை கடும் எதிர்ப்பின் காரணமாக அமைச்சர் பாண்டியராஜன் நீக்கிவிட்டார். இருந்த போதும் பாண்டியராஜன் பதிவிட்டதற்கான அடையாளமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.