நீட் மசோதா.. ஐகோர்ட்டை அதிர வைத்த தமிழக அரசு.. 'ஏன் சொல்லவில்லை'.. நீதிபதிகள் சரமாரி கேள்வி
சென்னை: 2017-ல் நீட் விலக்கு மசோதாக்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசு அந்த ஆண்டே ஒப்புகை தந்துள்ள நிலையில், அதுபற்றி சட்டசபையிலும், பொதுவெளியிலும் தெரிவிக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதா நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அப்போதே தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் நீட் மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இதுவரை நிறுத்தி வைத்தது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு சொல்லிவந்தது.

மத்திய அரசு தகவல்
இந்நிலையில் நீட் தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமனறம் மத்திய அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மத்திய அரசும் அடுத்தடுத்த வாதங்களின் போது அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கடந்த 2017ம் ஆண்டே நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்ததகாவும். அதைத்தொடர்ந்து மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தது.

சட்டசபையில் கேள்வி
இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் இதுபற்றி கேள்வி எழுப்பி பேசுகையில், நீட் மசோதா 2017ம் ஆண்டே நிராகரிக்கப்பபட்ட நிலையில், ஏன் சட்டசபையில் இந்த தகவலை மறைத்தீர்கள் என்றும், ஏன் முன்பாக தெரிவிக்கவில்லை என்றும தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சண்முகம் மறுப்பு தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு கேள்வி
இந்நிலையில் நீட் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 2017-ல் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசு 2017ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியே ஒப்புகை தந்துள்ள நிலையில், நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து சட்டசபையில் தெரிவிக்காதது ஏன்? பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கண்டித்தது.

ஏன் சொல்லவில்லை
மேலும் மத்திய அரசின் கடிதம் பற்றி தமக்கு தெரியாது என்று செயலாளரோ அமைச்சரோ கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதா திருப்பி அனுப்பபட்டது எம்எல்ஏக்களுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் தெரிய வண்டிய விஷயம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் மசோதக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவதை நிராகரிக்கப்பட்டதாகவே கருத வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மசோதக்களை மீண்டும் நிறைவேற்றலாம்
மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் அவற்றை நிறைவேற்ற எந்த தடையும் இல்லை என்றும் மசோதாவை ஏற்பது, நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது போன்றவை குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உள்பட்டது என்றும் அதை கேள்வி எழுப்ப முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஆக. 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications