இறுக்கமான முடிச்சு.. நீட் மசோதாவை ஆளுநர் ரவி டெல்லிக்கு அனுப்பியது ஏன் தெரியுமா? "சங்கதியே" வேறயாம்!
சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திடீரென குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? இதற்கு பின் என்ன நடந்தது? என்பது தொடர்பாக முக்கிய விவகாரங்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் நடந்த மீட்டிங் ஒன்றுக்கு பின்புதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தன்னிடம் கவர்னரின் செயலாளர் தெரிவித்ததாக சட்டப்பேரவையில் நேற்று மதியம் (4.5.2022) 2 மணி வாக்கில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
நீண்ட மாதங்களாக கிடப்பில் போட்டுவைத்திருந்த மசோதாவை ஆளுநர் திடீரென்று அனுப்பி வைத்தது எப்படி என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் எதிரொலிக்கவே செய்கிறது.
“எல்லோருக்கும் ஒரே அசைன்மென்ட்” - ஆதீன சர்ச்சையில் இணைந்த ஆளுநர் - பேச்சின் பின்னணி என்ன?
நீட் விலக்கு
நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறையாக கேபினெட்டின் ஒப்புதலைப் பெற்று பேரவையிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே பொருள் குறித்த மசோதாவை இரண்டாவது முறையாகவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை ஆளூநர் நிராகரிக்க முடியாது ; குடியரசு தலைவருக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்டம். அப்படியிருந்தும் அவர் அனுப்பி வைக்காமல் கிடப்பிலேயே வைத்திருந்தார்.
மசோதாவை அனுப்ப வேண்டும்
ஆனால் இதில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. ஆளுநருக்கு இதில் கால நிர்ணயம் எதுவும் இல்லை. அந்த சூழலில், பலவேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக சமீபத்தில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைக்கட்டுமா என்று ஆளுநர் கேட்டதாக தெரிகிறது.
அமித் ஷா கட்டளை
இதற்கு ''நாங்கள் சொல்கிற போது அனுப்பினால் போதும். அதுவரை பந்து உங்களிடமே இருக்கட்டும்'' என்று அமித் ஷா அறிவுறுத்தியதாக அப்போது செய்திகள் கசிந்தன. அதனால் தான் பல்வேறு வழிகளில் திமுக அரசு அதிரடி மூவ்களை எடுத்தும் நீட் விஷயத்தில் கவர்னர் அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று திடீரென அனுப்பி வைத்திருக்கிறார். இதற்கான பின்னணி உச்சநீதிமன்றம்தான் என்கிறார்கள் உச்சநீதிமன்ற தமிழக வழக்கறிஞர்கள்.
பேரறிவாளன்
அதாவது, பேராறிவாளனின் விடுதலை குறித்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.என்.நடராஜ், பேராறிவாளன் விடுதலையில் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் ஆளுநருக்கே உண்டு'' என்று அழுத்தமாக வாதிட்டபோது, அதனை இடைமறிந்த நீதிபதி நாகேஸ்வரராவ், ''இது மாநில அரசின் உரிமை சம்மந்தப்பட்ட விவகாரம். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்.
வழக்கு நீதிபதிகள்
அதைத்தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது. இந்த நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லப்பட்ட பல தீர்ப்புகள் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால் மத்திய அரசின் இத்தகைய வாதங்களை இந்த நீதிமன்றம் ஏற்காது'' என்று துவக்கத்திலேயே மத்திய அரசுக்கு எதிரான நிலையை வெளிப்படுத்திவிட்டார். இதனை தொடர்ந்து நடந்த வாதங்களும் மத்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிராகவே இருந்தன.
ஆளுநர் மீது காட்டம்
ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்.. மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவிற்கு ஆளுநர் கட்டாயமாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
கேள்வி மேல் கேள்
இந்த வழக்கு 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப் பட்ட நிலையில், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மத்தியில் ஒரு அவசர ஆலோசனை நடந்திருக்கிறது. அதில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜும் கலந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிராகத்தான் நீதிமன்றம் இருக்கிறது. மாநில அமைச்சரவையின் அதிகாரமும் ஆளுநரின் அதிகாரமும் தான் இங்கு விவாதிக்கப்படுகிறது.
அவசர மீட்டிங்
பேராறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரத்தை பலகீனப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால், அது ஆளுநரின் மேஜையில் இருக்கும் மற்ற மசோதாக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. அவரின் அதிகாரம் தொடர்பாகவும் விவாதத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பேரறிவாளன் வழக்கு ஆளுநரின் செயல்பாட்டில் போடப்பட்ட இறுக்கமான முடிச்சு போல மாறி இருக்கிறது. இதை வைத்து திமுக அரசு மற்ற விவகாரத்திலும் சட்ட போராட்டத்தை தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன என்று இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஆளுநருக்கு எதிராக திமுக அரசு கடுமையாக நடந்து கொள்வது நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தான்.
Recommended Video
நீட் முடிவு
அந்த மசோதா அவரிடமே இருப்பதை தவிர்க்கும் வகையில் அதனை டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட சொல்லலாம் என்று தீர்மானித்து அதனை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அவரும் சரிதான் அனுப்ப சொல்லுங்கள். நாம் இங்கே அந்த மசோதாவில் என்ன செய்யலாம் என்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளாராம். இதன்பிறகே, தமிழக ஆளுநருக்கு உத்தரவு பறக்க, குடியரசு தலைவருக்கு அனுப்பும் முடிவை எடுத்தார் கவர்னர் என்று உச்சநீதிமன்ற தமிழக வழக்கறிஞர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.