இதுதான் நீட் தேர்வின் நிஜ முகம்.. தமிழகத்தில் ஜஸ்ட் 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் சீட்
சென்னை: நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது.. ஏழை எளிய.. அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் டாக்டராகப் போகிறார்கள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை தகர்த்துள்ளது கள நிலவரம்.
மருத்துவ கல்லூரியில் சேர நாடு முழுமைக்கும் பொதுவான நுழைவு தேர்வாக நீட் என்ற தேர்வை மோடி அரசு மத்தியில் பதவிக்கு வந்த பிறகு கொண்டு வந்தது. இதன் பாடத் திட்டம் வேறு, தமிழக அரசு பள்ளிகளின் பாடத் திட்டங்கள் வேறு என்பதால், இது நியாயமற்ற தேர்வு என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.
முன்பு பிளஸ் 2 மதிப்பெண்கள், கட்-ஆப் அடிப்படையில், மருத்துவ சீட்டுகள் கிடைத்த நிலையில், இப்போது தேசிய அளவிலான ஒரு பொது நுழைவுத் தேர்வு ஏழை, எளிய மற்றும், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து வருகிறது.

பாஸ் மார்க் மட்டுமே
நீட் தேர்வில் 720க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி. ஆனால் தேர்ச்சி பெறுவோர் எல்லோருக்கும் மருத்துவர் சீட் கிடைக்காது. தேர்ச்சி பெற்றாலே டாக்டர் சீட் கிடைத்துவிடும்ப்பா.. என பொது சமூகத்தில் ஒரு கருத்து பரவியிருப்பது, மக்களின் அறியாமையை காட்டுகிறதே தவிர, உண்மையான நிலவரம் வேறு. நீட் தேர்வில் பாஸ் செய்வது என்பது, எம்பிபிஎஸ் சீட்டுக்கு விண்ணப்பம் போட அவர் தகுதியானவராகிவிட்டார் என்றுதான் அர்த்தம். அதாவது 100க்கு 35 எடுத்து அடுத்த கிளாஸ் போக பாஸ் மார்க் போடுவதை போல மட்டுமே. டாக்டர் சீட் இதற்கு கிடைக்காது.

கட்-ஆப்தான் விஷயமே
அப்படியானால் வேறு என்னதான் வேண்டும்? இங்குதான் கட்-ஆப் என்ற மதிப்பெண் வருகிறது. அதாவது குறிப்பிட்ட மதிப்பெண்ணை நிர்ணயித்து இதற்கு மேல் பெற்றால்தான் டாக்டர் படிப்புக்கு சீட் தர முடியும் என்பதுதான் கட்-ஆப். எனவே பாஸ் செய்தால் மட்டும் போதாது. கட்-ஆப் மார்க்கை விட அதிகம் எடுக்க வேண்டும். பாடத்திட்டம் வேறு.. கோச்சிங் கிடையாது.. ஏழ்மை நிலை போன்றவற்றால், அரசு பள்ளி மாணவர்களால், இந்த கட்-ஆப்புக்கும் அதிக மதிப்பெண்களை எடுப்பது ரொம்ப கஷ்டம் என்பதால்தான் இங்கு சமூக நீதி அடிபடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

8 பேருக்கு மட்டுமே சீட்
இவ்வாண்டு, தமிழகத்தின் அரசுப் பள்ளி மாணவர்களில் நீட்டில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். ஏழைகளுக்கு உதவ தமிழக அரசு, நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியது. இப்படியான பயிற்சி மையத்தில் படித்து 500க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 4 பேர்தான். மேலும், பிற்படுத்தப்பட்ட ஜாதி (BC) பிரிவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் முறையே 495 மற்றும் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், இரு மாற்றுத் திறனாளி மாணவர்களும் எம்பிபிஎஸ் சீட் பெற வாய்ப்பு உள்ளது. ஆக மொத்தம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் எழுதியதில், வெறும் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

உயரும் கட்-ஆப்
2019ம் ஆண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண், அதற்கு முந்தைய ஆண்டைவிட 100 அளவுக்கு அதிகம். நீட் தேர்வில் மாணவர்கள் அதிகம் மதிப்பெண்கள் எடுக்க தொடங்கியதால், கட்-ஆப் உயர்த்தப்பட்டது. கடந்த வருடம், இதர பிரிவினருக்கு கட்-ஆப் 520 என்ற அளவில் இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு 470 கட்-ஆப். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) கட்ஆப் 458, தாழ்த்தப்பட்டோருக்கு 360 என்று நிர்ணயிக்கப்பட்டது. பழங்குடியினருக்கு 267 என்று கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

உள் இட ஒதுக்கீடு அவசியம்
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அலுமினி சங்கத்தின் செயலாளர் பிரசாத் மானே கூறுகையில், தமிழக அரசு தனது பாடத் திட்டத்தை தரம் உயர்த்தியுள்ளது. ஆனாலும், ஆசிரியர்களுக்கு அந்த பாடத்திட்டத்தில் புலமை கிடைக்க மூன்று நான்கு வருடங்கள் ஆகும். அதுவரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு செய்வது அவசியம் என்கிறார். இப்படிச் செய்தால்தான் கிராமப்புற மாணவர்களும் டாக்டர்களாகி, கிராமப்புறங்களில் மருத்துவ கட்டமைப்பு நன்றாக இருக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார் அவர்.

போட்டி அதிகரிக்கிறது
2017ம் ஆண்டு, 470 அல்லது 480 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அனைத்திந்திய அளவில் 2000மாவது ரேங்க் பெற முடிந்தது. ஆனால் 2020ம் ஆண்டில், அதே மதிப்பெண் எடுத்தவர்கள், அனைத்திந்திய அளவில் 20,000 ரேங்க்தான் பெற முடிந்தது. அந்த அளவுக்கு போட்டி அதிகரித்துவிட்டது. இதை எப்படி கிராமப்புறங்களில் உள்ள அல்லது அரசு பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்களால் சந்திக்க முடியும்?

அரசின் நீட் பயிற்சி மையங்கள்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறுகையில், தமிழக அரசு தனது நீட் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் ஆன்லைனில்தான் இந்த முறை பயிற்சி கொடுத்தும்கூட கடந்த வருடத்தை விட அதிகம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். எனவே பயிற்சி மையங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததை இந்த வருடமே செயல்படுத்தினால் நீட் தேர்வில் பாஸ் செய்த சுமார் 370 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் என்கிறார்.

ஆளுநர் அனுமதிப்பாரா?
ஆனால், இப்போதுள்ள நிலவரப்படி வெறும் 8 மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். எனவேதான் தமிழக அரசின் 7.5 சதவீத கோட்டாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது பல ஏழை, எளிய மாணவர்களுக்கு பலன் கொடுக்கும். இதுவரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இந்த கோட்டாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று குரல் எழுப்ப வேண்டியதும், ஆளும் கட்சி முனைப்பு காட்ட வேண்டியதும், ஓரளவுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர உதவும்.












Click it and Unblock the Notifications