“நீட் குறித்து என்டிஏ கூட்டணியின் பதில் என்ன?” சட்டென சீரியஸான அமித்ஷா! என்ன சொன்னாருனு பாருங்க
சென்னை: 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியை அமித்ஷா இன்று அறிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலை அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி எதிர்கொள்ளும் என்று அமித்ஷா கூறியிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா, "மக்களின் பிரச்சனைகளை திசை திருப்புவதற்கே நீட் பஞ்சாயத்து கிளப்பப்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இதற்காக கூட்டணி ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே திமுக தனது கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. மறுபுறம் அதிமுக கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருந்தது. யாருடன் கூட்டணி வைப்பது? மாநில கட்சிகளுடன் சுருங்கிக்கொள்வதா? அல்லது பாஜகவுடன் சேர்ந்துக்கொள்வதா? என்று பல்வேறு கேள்விகள் அதிமுக தலைவர்கள் மத்தியில் இருந்தது.
காரணம் இரட்டை இலை வழக்கு தொடங்கி பல்வேறு நெருங்கடிகள் அதிமுகவை பின்னி பிணைந்திருக்கின்றன. எனவே மத்திய தயவு இன்றி இதை சமாளித்துக்கொண்டு, தேர்தலை எதிர்கொள்ள முடியுமா? என்பது சந்தேகம்தான். மறுபுறம் மத்திய அரசுடன் ஏற்கெனவே மோதல் போக்கு இருந்திருக்கிறது. அண்ணாமலை, முன்னாள் முதல்வர் அண்ணா பற்றி பேசியதை அதிமுக தொண்டர்கள் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. இப்போது மீண்டும் கூட்டணி என்றால் தொண்டர்களை எப்படி சமாளிப்பது? என்றும் கட்சி தலைமைக்கு ஒருபுறம் கேள்வி இருந்தது.
இது எல்லாவற்றையும் தவிர மூன்றாவது உள்ள ஒரு விஷயம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தலையீடுகள். கட்சியை ஓவர் டேக் செய்ய இவர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இவர்கள் குறித்து உட்கட்சி மட்டத்திலேயே கூட பேச்சு அடிப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் கணக்கு போட்டுதான் கூட்டணி முடிவை எடப்பாடி எடுத்திருக்கிறார். குறிப்பாக பாஜக மாநிலத்தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது என்று எடப்பாடி உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் பாஜக புதிய மாநில தலைவருக்கான தேர்தல் இன்று தொடங்கியது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுக்கான நேரம் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். நாளை இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் வேட்பு மனுவுக்கான நேரம் முடிவடைந்து, நயினார் தலைவராக உறுதியான பின்னர்தான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பின்னர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications