நீட் தேர்வு.. உச்சநீதிமன்ற உத்தரவைத்தான் மத்திய அரசு செயல்படுத்துகிறது.. தர்மேந்திர பிரதான் விளக்கம்
சென்னை: நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது அல்ல என்று மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு இடம் அளிக்கப்பட்டு வந்த சூழலில், நீட் தேர்வை மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற சூழல் எழுந்தது. ஆனால், தாய்மொழி வழியாகவும், அரசுப் பள்ளிகளிலும் பயின்ற மாணவர்களால் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக இருந்து வருகிறது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ ஆகிய பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களே பெரும்பாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர்.

மருத்துவக் கனவு தவிடுப்பொடி
நடப்பாண்டு கூட தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் திறமை இருந்தும் கூட ஏழை மாணவர்களால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியவில்லை. இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு தவிடுப்பொடி ஆவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கு பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாக மாறுவது குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.

தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தல்
ஆரம்பம் முதலாகவே, தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல முறை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. எக்காரணத்தை கொண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. பாஜகவின் நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது.

நீட் தேர்வு யார் கொண்டு வந்தது?
இந்நிலையில், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்தவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது என பலரும் கூறி வருகின்றனர். அது முற்றிலும் தவறான கூற்றாகும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். இருந்தபோதிலும், சென்னையில் வைத்து இதை மீண்டும் சொல்கிறேன். நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே நீட் தேர்வை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.

'தமிழகம் விரைவில் இணையும்'
முன்னதாக, தேசியக் கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதிலளித்து கூறியதாவது: ஒருவர் தனது தாய்மொழியில் கல்வி கற்றால் தான் அதன் முழுமையை அடைய முடியும். இதை அடிப்படையாக வைத்தே தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையில் தமிழும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடும் தேசியக் கல்விக் கொள்கையை விரைவில் ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications