Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரு, அம்பேத்கர் பேசலாம்; அருந்ததி ராய் பேசக் கூடாதா? 7 வருடச் சிறை உறுதியா? Ex நீதிபதி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டப்படி வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அவர் பேசியது சட்டப்படி குற்றமா? போன்ற சந்தேகங்களுக்கு முன்னாள் நீதிபதி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அதிரடியான எழுத்தாளர்களில் ஒருவர் அருந்ததி ராய். அவரது அதிரடியான கருத்துகளால் அதிகம் அறியப்பட்டவர். தொடர்ந்து இடதுசாரி இயக்கவாதிகளால் முன்னிறுத்தப்பட்டு வரும் அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் நாவல் பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு 1997இல் புக்கர் பரிசு கிடைத்தது. அப்போது முதல் சர்ச்சைகளின் கூடாரமாகத் திகழ்ந்து வருகிறார் இவர். அல்லது இவர் பேசும் விசயங்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறது என்றும் சொல்லலாம்.

Arundhati Roy Hariparanthaman

கடந்த 14 ஆண்டுகள் முன்பாக இவர் பேசிய கருத்து ஒன்றுக்காக இப்போது இவர் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. அதற்கான வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டால் ஜாமின் பெற முடியாது. கிட்டத்தட்ட 62 வயதில், இவர் வெளியில் வரமுடியாத அளவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், இவரது எழுத்து வாழ்க்கை மட்டுமல்ல; மொத்த வாழ்க்கையும் முடங்கிவிடும்.

விசாரணை முடியும் வரை பல ஆண்டுகள் கூட அவர் காவலில் வைக்கப்படலாம். அந்தளவுக்கு இந்தச் சட்டம் மிகக் கடுமையானது. இந்தச் செய்தி வெளியானது முதல் மோடி அரசு விமர்சகர்களின் வாயை அடைக்க இதைப் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. இளமைக் காலம் தொட்டே அருந்ததி ராய், ஆளும் அரசுகளை எதிர்ப்பதில் துணிச்சலுடனே இருந்து வருகிறார். ஒருமுறை, “காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை. அது ஒரு வரலாற்று உண்மை. இந்திய அரசும் கூட இதை ஏற்றுக்கொண்டது” என்று பேசி இருந்தார்.

இந்த வழக்கு குறித்து முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர், “கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய பேச்சுக்காக வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் இப்போது அனுமதி வழங்கி இருக்கிறார். அவர் என்ன பேசினார் என்பதைப் பார்க்கவேண்டும். இந்தியா முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யச் சொல்லி அவர் பேசி இருக்கிறார். அதாவது காஷ்மீர் கைதிகளை மட்டும் அவர் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் சிறையில் உள்ள இஸ்லாமிய மற்றும் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் அவர் பேசி இருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பேரறிவாளனின் தாயாரும் கலந்துகொண்டார். அப்போது வெறும் 15 நிமிட பேச்சுதான் அருந்ததி ராய் பேசியது. அன்றைக்குக் காங்கிரஸ் மத்திய அரசு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153ஏ,153பி,124ஏ ஆகியவற்றின் படி வழக்குப் பதிந்தது. சுருக்கமான சொன்னால், இது ராஜத்துரோக சட்டத்தின்படி வழக்குப் போடப்படுகிறது. இது பிரிட்டீஷ் காலத்துச் சட்டம். 124ஏ சட்டப் பிரிவில் அரசை எதிர்த்துப் பேசினால் ராஜத்துரோகம் என்று சொல்கிறது.

ஒரு எதிர்க்கட்சி அரசை எதிர்த்துத்தான் பேசும். அப்படிப் பேசினால் அது ராஜத்துரோகமா? ஆகவேதான் உச்சநீதிமன்றத்தில் ரமணா தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் இந்தியா முழுவதும் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரக்கூடாது என்று தடைவிதித்தார். ஆகவே, இந்தத் தடைக்குப் பிறகு ஒரு வழக்கும் பதியப்படவில்லை. பதியப்பட்ட வழக்குகள் தொடர முடியாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் இப்போது டெல்லி துணை நிலை ஆளுநர் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளார். உபா சட்டம் என்பதே கொடுமையான சட்டம். சசி தரூர் கூட இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் இந்தச் சட்டமே தேவையில்லை என்கிறார். அருந்ததி அப்படிப் பேசியதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார். அருந்ததி ராய் பேசியதே தவறில்லை என்பதுதான் என் வாதம். ஏனென்றால், இந்தியா விடுதலைப் பெறும் போது காஷ்மீர் நம்முடன் இல்லை.

அதன் பின்னர்தான் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டது. உலக அளவில் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்படாத இடங்களில் பட்டியலில் காஷ்மீர் உள்ளது. காஷீர் முழுவதுமாக இந்தியாவுடன் இல்லை. அதற்குள் ஆசாத் காஷ்மீர் என்று ஒரு பகுதி உள்ளது. அது பாகிஸ்தான் ஆளுமையின் கீழ் இருந்தாலும் அது பாகிஸ்தானுக்குச் சொந்தம் இல்லை.

ஆக, இந்தப் பகுதி ஜம்மு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என்று தனித்தனியாக உள்ளது. இந்த மக்கள் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா? பாகிஸ்தானுடன் இருக்க வேண்டுமா? அல்லது தனிநாடாக இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. காஷ்மீரிகள் தான் முடிவு செய்ய முடியும் . அதை அருந்ததி ராய் சொல்லவில்லை. அதற்கு முன்பாக ஜவஹர்லால் நேரு தொடர்ந்து பேசி இருக்கிறார். 1952 அரசு அமைவதற்கு முன்னால் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பேசி இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய டெலிகிராமில் பேசி இருக்கிறார். ஐநா சபையிலேயே பேசி இருக்கிறார் நேரு.

1952இல் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போது இந்து சட்டத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். கூடவே காஷ்மீர் பற்றியும் கூறியுள்ளார். இந்தியாவில் 350 வருவாய் கிடைக்கிறது. அதில் 180 கோடியை ராணுவத்திற்காகவே செலவு செய்கிறோம். மேலும் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் முன்வைத்துள்ளார். அதைவிடவா அருந்ததி ராய் பேசிவிட்டார். ஆகவே அதை வைத்துதான் அருந்ததி ராய், 2010 இல் நேரு மீது வழக்குப் போடுங்கள் என்று அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

பேசினாலே அது பிரிவினை வாதமா? கேரளாவும் தமிழ்நாடு இந்தியாவுடன் சேராமல் இருந்திருந்தால், அது ஐரோப்பாவுக்கு இணையாக இருக்கும் என்று அமர்த்தியா சென் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால், அவர் மீது வழக்குப் போடுவார்களா? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐநா சபை வந்த பின்னர் தேசிய இனங்கள் தனிநாடு அமைப்பதற்கான உரிமையை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அருந்ததி ராய் காஷ்மீர் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு தேவை என்கிறார். அவர் ஆயுதம் தூக்கிப் போராடு என்றா சொன்னார். வாக்கெடுப்புதான் கேட்டார். அது எப்படி தவறாகும்? அவர் ஒரு எழுத்தாளர். அவருக்குப் பேசுவதும் எழுதுவதும் தான் வேலை. அது அவர் உரிமை” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+