ரூ4 கோடியை கன கச்சிதமாக போலீசில் போட்டுக் கொடுத்த கறுப்பு ஆடு யார்? கொந்தளிக்கும் நெல்லை பாஜக!
சென்னை: திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டு பிடிபட்ட ரூ4 கோடி விவகாரம் தமிழக பாஜகவில் பெரும் புகைச்சலைக் கிளப்பிவிட்டதாம்.
திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறிப்பிட்ட கோச்சில் ஏறி மிக சரியாக 3 நபர்களை அடையாளம் கண்டு ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூ4 கோடி பணம், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது; சிக்கிய 3 பேரும் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சிக்கியவர்களிடம் இருந்து பாஜக உறுப்பினர் அட்டைகளும் பிடிபட்டுள்ளன.

இதனையடுத்தே நயினார் நாகேந்திரனின் உதவியாளர், ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளைத் தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விவகாரம் திருநெல்வேலி பாஜகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது எப்படி சாத்தியமானது என்பதெல்லாம் விவாதிக்கப்பட்டும் வருகிறது.
ஹைதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பணம் கொண்டுவரப்படும் விவகாரம் பாஜகவின் மேல் மட்டத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது; அப்படியான சூழ்நிலையில் மிகச் சரியான இந்த கோச்சில் இந்த சீட் நம்பரில் இருப்பவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தது எப்படியாக நடந்திருக்கும்? யாரோ மிக துல்லியமாக போலீசில் போட்டுக் கொடுக்காமல் இது சாத்தியமே இல்லை என்கின்றனர் நெல்லை பாஜகவினர்.
திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மிக எளிதாக வெல்லும் வாய்ப்புள்ளது என்பது அக்கட்சியினர் நம்பிக்கை. அதேநேரத்தில் திமுக, காங்கிரஸின் அதீத செல்வாக்கு பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தரும் என்கின்றனர் அந்த இரு கட்சிகள். ஒருவேளை நயினார் நாகேந்திரன் வென்றால் மத்திய அமைச்சராகவும் வாய்ப்பிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, பாஜகவிலேயே சில கறுப்பு ஆடுகளே ரூ4 கோடி தகவலை போலீசாருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் கன கச்சிதமாக பாஸ் செய்திருப்பார்களோ? என சந்தேகிக்கின்றனர் நெல்லை பாஜகவினர். மேலும் இந்த விவகாரத்தை அண்ணன் நயினார் நாகேந்திரன் சும்மா விட்டுவிடவும் மாட்டார்.. காட்டிக் கொடுத்த கறுப்பு ஆடுகளுக்கு எதிராக நிச்சயம் காட்டமான நடவடிக்கையை மேற்கொள்வார் என நம்புகின்றனர் நெல்லை பாஜகவினர்.












Click it and Unblock the Notifications