உண்மை தெரியனுமா? சிபிஐயிடம் கொடுங்க.. நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையில் கண்சிவந்த அன்புமணி!
சென்னை: ‛‛நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஜெயக்குமார் தனசிங். தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே தான் அவர் நெல்லை எஸ்பிக்கு ஒரு புகார் கடிதம் அளித்தார்.

அந்த கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சில காங்கிரஸ் நிர்வாகிகளின் பெயரையும் அவர் அந்த கடித்ததில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் நேற்று முன் தினம் மாலையில் ஜெயக்குமார் தனசிங் திடீரென்று மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அதோடு அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஜெயக்குமார் மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரை யாரோ மர்மநபர்கள் எரித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ள அவர் இப்படி இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஓர் அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர், காவல்துறையில் புகார் அளித்தும் கூட அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மகிழுந்து அவரது தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரது உடல் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அவரது உடலின் பெரும்பகுதி எரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. அவரது உடலை படம் பிடிப்பதற்குக் கூட காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஐயத்தை உறுதி செய்திருக்கிறது.
ஜெயக்குமாரை கடந்த 3 நாட்களாகவே காணவில்லை. இது தொடர்பாக அவரது மனைவியும், மகனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜெயக்குமாரே தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டிருந்தால் ஜெயக்குமாரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவல்துறை செயல்படத் தவறி விட்டது. ஜெயக்குமாரின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயக்குமார் படுகொலை வழக்கில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications