அரசியலில் என்னை அநாதையாக்கி விட்டார்கள்! நெல்லை கண்ணன் உருக்கம்! கண்ணீர் சிந்திய திருமா!
சென்னை: அரசியலில் சில அநாதைகளை நம்பி தாமும் அநாதையாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீருடன் உருக்கமாக பேசியிருக்கிறார் நெல்லை கண்ணன்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
நெல்லை கண்ணன் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பதால் அந்தக் கட்சியை தான் சூசகமாக சாடியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

விசிக விருது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு காமராசர் கதிர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் காங்கிரஸ்காரரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன், இரண்டாம் விடுதலை வாங்கிதந்த சிங்கம் நீங்கள் என ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

கண்ணீர் சிந்தி
மேலும், இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கூறிய நெல்லை கண்ணன், தன்னையறியாமல் கண்ணீர் சிந்தியதுடன் உங்களின் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை கருணாநிதி அழைத்ததாகவும் அப்போது தமது புத்திக்கு அது உரைக்கவில்லை எனவும் நெல்லை கண்ணன் மனம் திறந்து பேசினார்.

நரசிம்மராவ்
இதேபோல் திருமாவும், ஸ்டாலினும் தங்கள் உடல்நலத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொண்ட அவர், கருணாநிதியை எதிர்த்து தன்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார் என்ற தகவலையும் நெல்லை கண்ணன் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு ஒலி நாடாவே வெளியிட்ட தாம், இன்று அரசியல் அநாதையாகிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

திருமா அழுகை
நெல்லை கண்ணன் கண்ணீர் சிந்துவதை பார்த்த திருமாவளவன், தாமும் கண்ணீர் வடித்தார். இதனால் அந்த இடமே உணர்ச்சிக்கரமாக மாறியது. இதனிடையே நெல்லை கண்ணன் ஒரு காலத்தில் திமுகவையும், கருணாநிதியை கடுமையாக சாடிப் பேசி அரசியல் செய்தவர் என்பது இங்கு திரும்பி பார்க்கத்தக்கது. திமுகவினர் பலரும் இதை சமூக வலைத்தளங்களில் சுட்டிக் காட்ட தவறவில்லை.












Click it and Unblock the Notifications