Vijay: "உலகிலேயே இறந்தவர்கள் குடும்பத்தினர் பஸ் ஏறி போய் ஆறுதல் கேட்பது இதுதான் முதல்முறை!"
சென்னை: உலகத்திலேயே இறந்தவர்கள் வீட்டு குடும்பத்தினர் பஸ் ஏறி போய் ஆறுதல் கேட்கிறது இதுதான் முதல் முறை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரில் 30 குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு பேருந்து மூலம் அழைத்து வரும் விஜய்யின் செயல்பாட்டைத்தான் இப்படி திட்டி தீர்த்து வருகிறார்கள்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகிவிட்டனர். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ 10 லட்சம் வழங்கப்பட்டது. அது போல் தவெக சார்பில் தலா ரூ 20 லட்சம் நிவாரணமாக ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது.
கரூர் சம்பவம் நடந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில் விஜய் வெளியவே வரவில்லை. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறவும் இல்லை என விமர்சனம் எழுந்தது. சரி நிவாரணம் வழங்கும்போதாவது அவர்களை கரூர் சென்று சந்திப்பார் என எதிர்பார்த்த போது அதுவும் நடக்காமல் ஆன்லைனில் பணத்தை போட்டுவிட்டனர்.
இந்த நிலையில் விஜய் இப்போது கரூர் போவார் , அப்போது போவார் என சொல்லி சொல்லி தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் செல்கிறாராம். இதற்காக மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் புக் செய்யப்பட்டுள்ளனவாம்.
ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு அவர்களது அறைக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கிறாராம். இதற்காக அவர்கள் வந்து செல்லும் செலவு எல்லாம் தவெக சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து உயிரிழந்த குடும்பத்தினரை சேர்ந்த 30 பேர் 5 ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைத்து வருகிறார்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம், சேந்தமங்கலம் கிழக்கு கிராமம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார். அவரது கணவர் ஏற்கெனவே விபத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர் வாக்கரின் உதவியுடன் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
இவர்கள் தவிர கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 குடும்பத்தினரை இன்று தவெக நிர்வாகிகள் அழைத்து செல்லவில்லை. அவர்களது குடும்ப வழக்கப்படி குடும்ப உறுப்பினர் இறந்து 30 நாட்கள் ஆனதும் சடங்கு நடத்துவதால் இன்று வரை வெளியே எங்கும் செல்லக் கூடாதாம். இதனால் அவர்கள் நாளை திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து மாமல்லபுரம் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் இந்த செயல்பாட்டை பலரும் கண்டிக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரியமே துக்கம் நடந்த வீட்டிற்கு சென்றுதான் ஆறுதல் சொல்ல வேண்டும். அதிலும் விஜய் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றால் கூட்டம் கூடி அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் அவர் கரூர் சென்று ஒரு மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்கலாம். ஆனால் இப்படி எதுவுமே இல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பஸ் ஏறி போய் ஆறுதல் கேட்பது இதுதான் முதல் முறை என நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications