ராகவன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: ''சபாஷ் அண்ணாமலை''.. புகழும் நெட்டிசன்கள்
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.டி.ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதும், அதை வெளியிட்டவர் கட்சித்தலைவர் அண்ணாமலையிடம் அனுமதி பெற்றதுபோல் வாட்ஸ் அப்பில் பதிவிட்டதையும் வைத்து சபாஷ் அண்ணாமலை என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
Recommended Video
இன்று காலை தனியார் யூடியூபர் ஒருவர் பாஜக மாநிலப்பொதுச் செயலாளர் கே.டி.ராகவனை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட காணொளி பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் ஏற்படுத்தியது.

சமூகவலைதளங்களில் தன்னை பற்றி வீடியோ வெளியானதை அறிந்ததை அடுத்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார்.
அரசியல் வட்டாரத்தில் புயலைக்கிளப்பும் இந்த விவகாரத்தில் ஒரு பக்கம் கே.டி.ராகவன் இதை மறுத்து சட்டப்படி சந்திப்பேன் என ராஜினாமா அறிவித்தாலும் மறுபுறம் பாஜக தலைவர் அண்ணாமலை இதை அனுமதித்ததாக ஒரு தோற்றத்தை யூடியூபர் அவருடன் நடத்திய வாட்ஸ் அப் உரையாடல் ஸ்க்ரீன் ஷாட்டை போட்டதை வைத்து நெட்டிசன்கள் அண்ணாமலையை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஒரு கட்சித்தலைவராக, ஐபிஎஸ் அதிகாரி போல் உரிய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் எனவும், அண்ணாமலை பட காட்சியில் மனோரமா ரஜினியிடம் பேசும் காட்சியைப் போட்டு " அய்யா அண்ணாமல. இன்னும் ஐபிஎஸ்ல இருந்த அதே நேர்மையோடவே இருக்கியேய்யா. என் அண்ணாமலை மாறல. என் அண்ணாமலை மாறல" என பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.
நிச்சயம் அண்ணாமலை அரசியலில் ஒரு புதிய வரலாற்றை படைப்பார், வருங்காலத்தில் திமுக, பாஜக என்கிற நிலையை ஏற்படுத்துவார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு நெட்டிசன் வித்தியாசமாக அந்த நபர் அண்ணாமலையைத்தான் சிக்க வைத்துள்ளார். உட்கட்சிப்பிரச்சினை கட்சிப்பெயரை கெடுத்துவிடும் என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை செய்த செயல் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டாலும் கட்சிக்குள் அது சலசலப்பை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது. வீடியோ வெளியிட்ட நபர் நோக்கம் நிறைவேறியிருந்தாலும் சமூகத்தில் மிக அந்தஸ்த்திலிருந்த ஒரு நபரின் கவுரவம், கட்சியின் கவுரவம் உள்ளதால் இது வருங்காலங்களில் மேலும் புயலைக்கிளப்ப வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications