தலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை.. ரத்து செய்த ஹைகோர்ட்
புதிய தலைமை செயலக வழக்கில் அரசின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை: புதிய தலைமை செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து செய்யப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
திமுக ஆட்சியின்போது, ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது.
அதோடு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
[பாலில் கலப்படம்.. இதுவரை ஏன் நடவடிக்கை இல்லை.. விளாசிய ஹைகோர்ட் ]
எஸ்.எம்.சுப்ரமணியம்
ஆனால் இந்த ஆணையத்துக்கு எதிராக திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவதும், அதற்கு மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
கண்துடைப்பு
விசாரணை ஆணையம் என்பது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று சொல்லி, ரகுபதி ஆணையத்தையும் கலைத்தார். மேலும் ஆணையம் திரட்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசு பரிசீலித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார்.
திமுக வழக்கு
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர். இதனை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா கடந்த மாதம் விசாரித்தார்.
ஒத்தி வைப்பு
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பரிந்துரைப்படி ஆவணங்களை தமிழக அரசு முறையாக பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசர கதியில் மாற்றியுள்ளதாக இருவர் தரப்பிலும் குற்றஞ்சாட்டி, வழக்கையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
அதிரடி ரத்து
தற்போது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது