Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!
சென்னை: தங்கக் கடன்களுக்கான புதிய வரம்புகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய நிதி அமைச்சக வழிகாட்டுதலின்படி, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன.
இதுவரை பொதுவான முறையில் வழங்கப்பட்டு வந்த தங்கக் கடன்களுக்கு, தற்போது தொகையைப் பொறுத்து புதிய விகிதாச்சார வரம்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், சிறு மற்றும் பெருந்தொகைக் கடன்களுக்கு தனித்தனி விதிமுறைகள் பின்பற்றப்படும்.

புதிய விதிகள் ரூ.2.5 லட்சம் வரை தங்கக் கடன் பெறுவோருக்கு, தங்கத்தின் சந்தை மதிப்பில் 85% வரை அனுமதிக்கிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கான சலுகையாக இந்த உயர்ந்த விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் கோருவோருக்கு 80% மட்டுமே வழங்கப்படும். மேலும், ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு 75% வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால், அதிக தொகை கடன்களுக்குக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவே இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அதிகாரிகள் விளக்கினர். தங்கத்தின் விலை சரிந்தால், அதிக கடன் வழங்கியிருப்பது அபாயம் என்பதால் இம்மாற்றம் அவசியம்.
அதிக கடன் கோரி தொழில் தொடங்க திட்டமிட்டவர்கள், அவசர தேவைக்கு பெரும் தொகை எதிர்பார்த்தவர்கள் புதிய விதிகளால் கவலைக்குள்ளாகியுள்ளனர். இதன் தாக்கம் சிறுதொழில்முனைவோர், நடுத்தர வர்க்கத்தினர் மீது இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெறும் மக்களுக்குப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். கடன் பெறுபவர்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதே இந்தப் புதிய மாற்றங்களின் முதன்மை நோக்கமாகும்.
கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகு, அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தை உடனடியாகவோ அல்லது அதிகபட்சம் 7 வேலை நாட்களுக்குள்ளோ வாடிக்கையாளரிடம் நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும். இந்த விதியை மீறினால், கடன் நிறுவனங்களுக்குத் தினசரி அபராதம் விதிக்கப்படும். இது கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டை அதிகரித்து, வாடிக்கையாளர் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கை ஆகும்.
மேலும், வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணங்கள், அபராதங்கள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் கடன் வழங்கும்போதே தெளிவாகவும், முன்கூட்டியேவும் தெரிவிக்கப்பட வேண்டும். கடன் தவணையைச் செலுத்த முடியாத சூழ்நிலையில், அடமானத் தங்கம் ஏலம் விடப்பட்டால், அந்த நடைமுறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications