ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம்.. ராமதாஸ் கோரிக்கையை உடனே ஏற்ற தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி
உரிய விதிமுறைகளை உருவாக்கி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம்கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஆணைப்படி உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த டாக்டர் ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு அண்மைக்காலங்களில் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்தது ஆன்லைன் சூதாட்டங்கள்தான். குறைந்த காலத்தில் மிக அதிக வருவாய் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தையுடன் கூடிய மாய வலையை வீசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், அதில் மயங்கி சூதாட வரும் இளைஞர்களின் பணத்தை முற்றிலுமாக சுரண்டி, மீள முடியாத கடன் வலையில் சிக்க வைக்கின்றன. கடன் வலையில் இருந்து மீள முடியாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் அறிக்கை
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தடுக்க தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த நவம்பர் 21ஆம் நாள் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி 25ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் தான் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கத்தை உயர்நீதிமன்றம் விமர்சிக்கவில்லை. அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. மாறாக, சில நுட்பமான காரணங்களின் அடிப்படையில் தான் இந்தச் சட்டத்தை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தடை சட்டம் செல்லாது
ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல என்று உச்சநீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்து உள்ளது; சட்ட ஆணையமும் இதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான் "ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்" என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிர்ஷ்ட விளையாட்டு
ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்கள் திறன் சார்ந்த விளையாட்டுகள் என்பது அந்தப் போட்டிகளை நடத்தும் நிறுவனங்களின் வாதம். அதை பல தருணங்களில் உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், ஆன்லைன் ரம்மி என்பது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு என்பது தான் எதார்த்தம்.

தமிழக அரசு
இதை நீதிமன்றங்கள் உணரும் வகையில் போதிய ஆதாரங்கள், காரண, காரியங்களுடன் சட்டம் இயற்றப்பட்டால் அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நம்பிக்கை. இதை தமிழக அரசு செய்ய வேண்டும். இரு மனிதர்கள் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி, அதில் ஒருவர் வெற்றி பெறும் போது, அதில் அதிர்ஷ்டம் இல்லை. திறமை மட்டுமே உள்ளது என்று கூறுவதில் நியாயம் உள்ளது.

ஆன்லைன் சாப்ட்வேர்
ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் அப்படி இல்லை. ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால், மறுபுறத்தில் ஆடுவது மனிதர்கள் அல்ல. மாறாக மென்பொருட்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது முதலில் ஒரு சில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள் அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும் போது, அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும். அதற்கேற்ற வகையில் தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை
இதை உணராமல் ஆன்லைன் ரம்மி ஆட்டத்துக்கு அடிமையானவர்கள், மீண்டும் மீண்டும் விளையாடி பணத்தை இழப்பார்கள். இறுதியில் அவர்களின் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இவற்றை ஆதாரங்களுடன் விளக்கி, ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இன்றைய நிலையில் இது தான் ஒரே வழியாகும்.

சரியான தீர்வு
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் கூட எந்த பயனும் கிடைக்காது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, புதிய சட்டம் இயற்றுவது தான் சரியான தீர்வு ஆகும். எனவே, சட்ட வல்லுனர்கள், தகவல் தொழில்நுட்பச் சட்ட வல்லுனர்கள் அடங்கிய வல்லுனர் குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரை அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி உறுதி
இதனிடையே தமிழக சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும், "இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது" என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய சட்டம் இயற்றப்படும்
ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது. பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி. விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு முதல்வர் நேற்றையதினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். முதல்வரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications