சூடுபிடித்த எடப்பாடி ஆட்டம்.. புதிய ஐடி கார்டு விநியோகம் ஆரம்பம்.. விரைவில் இன்னொரு பொதுக்குழு!
அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை : அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பழைய உறுப்பினர் அட்டைக்கு பதிலாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துடன் கூடிய புதிய உறுப்பினர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பழைய உறுப்பினர் அட்டையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தோடு கையெழுத்தும் இருந்தது.
இப்போது, ஓபிஎஸ் புகைப்படத்தையும், கையெழுத்தையும் நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர்
அதிமுகவில் ஏற்பட்ட ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது ஈபிஎஸ் தரப்பு. இதையொட்டி, சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பொதுச் செயலாளர் தேர்தல் பற்றி ஆலோசித்தது ஈபிஎஸ் அணி.

அவசர ஆலோசனை
அதன்படி, விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது என்றும் அதில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் ஒரு பொதுக்குழுவையும் கூட்டுவது என்றும் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, ஓபிஎஸ் படங்களுடன் கூடிய உறுப்பினர் அட்டைகளுக்குப் பதிலாக புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

புதிய அடையாள அட்டை
அதிமுக உறுப்பினர் அட்டையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் கையெழுத்துகளும் இடம்பெற்றிருக்கும். ஜெயலலிதா இருந்தபோது ஜெயலலிதாவின் பெரிய படத்துடன் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களுக்கு பச்சை வண்ண உறுப்பினர் அட்டைகள், அதிமுக தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.

ஓபிஎஸ் படம் இல்லை
இந்நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவிட்டதால், கட்சி அறிக்கை, கட்சி அலுவலகங்கள், தலைமை அலுவலக பேனர் உட்பட அனைத்து இடங்களிலும் ஓபிஎஸ் படங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து விட்டனர். சுவர் விளம்பரங்களிலும் கூட ஓபிஎஸ் பெயரையும், படத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெயிண்ட் அடித்து அழித்த காட்சிகளும் அரங்கேறின.

உறுப்பினர் அட்டைகள் ரெடி
இந்நிலையில் தான் அதிமுக உறுப்பினர் அட்டைகளிலும் ஓபிஎஸ் படத்தை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் படம் இன்றி, லட்சக்கணக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டு கட்சி அலுவலகத்தில் 2 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இவை மாவட்ட வாரியாக அட்டைகள் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுகவினருக்கு, உறுப்பினர் அடையாள அட்டைகளை அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மீண்டும் பொதுக்குழு
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 17-ஆம் தேதி வருகிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்துக்கான தேதி முடிவு செய்யப்படும். பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும். எனவே ஏப்ரல் மாதம்இறுதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications