ஆரம்பமே அதிரடி! எல்லோரும் வாங்க.. எம்எல்ஏக்களை அழைக்கும் எடப்பாடி! எடுக்கப்படும் மிக முக்கிய முடிவு?
சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்த நிலையில் இன்றோ அல்லது நாளையோ அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது. இதில் மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஓபிஎஸ் எதிர்ப்பிற்கு இடையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

தீர்மானங்கள்
அதிமுக செயற்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன செய்ய முடியும்
அதோடு சிறப்பு தீர்மானம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தது நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் வைத்தியலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் , மனோஜ் பாண்டியன், பிரபாகர் ஆகியோரும் நீக்கப்பட்டு உள்ளனர்.

எம்எல்ஏக்கள்
இவர்களில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் எம்எல்ஏக்கள். இவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும், வேறு கட்சியில் இணையாத வரை எம்எல்ஏக்களாக தொடர முடியும். இவர்கள் இன்னொரு அதிமுக அணி என்று கூறப்படும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சிக்கல் எழும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு முடிந்ததால் இன்றோ அல்லது நாளையோ அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது.
Recommended Video

முடிவு
இதில் மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிமுக உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதால் சட்டசபையில் அவர் துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை இழப்பார். இது பற்றி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய எதிர்கட்சித் துணை தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

யார்?
பெரும்பாலும் எதிர்கட்சித் தலைவராக வேலுமணி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அவர் இந்த பதவிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விரைவில் புதிய எதிர்கட்சித் துணை தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications