வரும் 28ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம்.. மது விலக்கு கோரி அறப்போராட்டம்.. அடித்து ஆடும் திருமா
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் வரும் 28 ஆம் தேதி கருப்பு தினமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுசரிக்கும் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்கனவே கிளம்பியிருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. நாட்டின் குடியரசு தலைவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன. இந்த நிலையில், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா நடைபெறும் 28 ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கருப்பு தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொல் திருமாவளவன் கூறுகையில், " விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே 28 ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து துக்க தினமாக அனுசரிப்போம். முழுமையான மது விலக்கு கோரி ஜூன் 2 வது வாரத்தில் அறப்போராட்டம் நடைபெறும். மக்கள் நலனுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடவும் தயார்" என்றார்.












Click it and Unblock the Notifications