முப்பெரும் விழா.. விஜய பிரபாகரனுக்கு முடி சூடல்.. வருகிறார் விஜயகாந்த்.. எழுச்சி பெறுமா தேமுதிக!
அடுத்த கட்டத்துக்கு தேமுதிக நகர்வதாக சொல்லப்படுகிறது
சென்னை: திருப்பூரில் செப்டம்பர் 15-ந்தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. தேமுதிகவுக்கு புத்துயிர் அளிக்கும் நிகழ்வாகவே இந்த முப்பெரும் விழா அமையும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
தேமுதிகவின் நிலை தற்போது தேய் பிறையாகவே உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுத்தும், எல்லாவற்றிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்ததால், மாநில கட்சி அந்தஸ்த்தை அந்த கட்சி இழந்தது.
கிராமப்புறங்களில் இருக்கும் வாக்கு வங்கியும் சரிந்து, கட்சியே காணாமல் போகும் அபாயத்துக்கு வந்துவிட்டது. இதுக்கெல்லாம் காரணம் விஜயகாந்த்தின் செயல்பாடு இல்லாததும், பிரேமலதா கட்சி நடத்தும் விதமும்தான் என்பதை அக்கட்சி தொண்டர்களே நன்கு அறிந்த உண்மை.

2 விஷயம்
மிச்சம் சொச்சம் இருக்கும் தொண்டர்களையாவது தக்க வைத்து கொள்ளவும், கட்சியின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தேமுதிக 2 முக்கிய விஷயங்களை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

முப்பெரும் விழா
முதலாவதாக, செப்டம்பர் 15-ந்தேதி திருப்பூரில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடக்க உள்ளது. இந்த விழாவுக்கு விஜயகாந்த்தான் தலைமை என்று கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்
இரண்டாவதாக, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற வருடம் விஜய பிரபாகரன் கட்சியில் நுழைந்த உடனேயே ஒரு பெரிய எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் எழுந்தது உண்மையே. குறிப்பாக, இளைஞர்களை தன்வசம் திருப்பி பெரிய அளவு மாஸ் காட்டுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

சறுக்கல்
ஆனால் எப்போது விஜயபிரபாகரன் பிரச்சாரத்துக்கு வந்தாரோ அப்போதே, கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் அதிருப்தியும் சம்பாதித்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால், இவர் வாயை திறந்ததுகூட அக்கட்சியின் சறுக்கலுக்கு பெரிய காரணம் என்றே சொல்லலாம். காரணம் எப்படிப் பேச வேண்டும், பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவது என்று ஏகப்பட்ட ஓட்டைகள் இவரிடம்.

புதிய பொறுப்பு
இருந்தாலும், தேமுதிகவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக கட்சியில் யாருமே இப்போது இல்லை. இதனால் வேறு வழியின்றி விஜயபிபரபாகரனை, விஜயகாந்த் அதிகம் நம்புவதாக தெரிகிறது. அதனால் எப்படியும் இவருக்கு இளைஞரணியில் பதவி கொடுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆக.. முப்பெரும்விழா, மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு தருவது என்ற அடுத்த கட்டத்துக்கு தேமுதிக அடி எடுத்து வைத்துள்ளது.

ஈரமனசு
எந்த பதவி, எந்த பொறுப்பினை கொடுத்தாலும் சரி.. எப்பேர்ப்பட்ட விழாவினை நடத்தினாலும் சரி.. மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து, மக்களை எந்த அளவுக்கு நெருங்குகிறோமோ அதில்தான் ஒரு கட்சியின் வெற்றியும், வளர்ச்சியும் உள்ளது என்பதே கடந்த கால வரலாறு நமக்கு காட்டிய உண்மை! இதை தேமுதிக இனியாவது உணர்வதே விஜயகாந்த் என்ற மனிதனின் ஈர மனசுக்கும், அவரது உழைப்புக்கும் காட்டும் நன்றிக்கடனாகும்!












Click it and Unblock the Notifications