அடுக்குமாடி குடியிருப்பு.. பத்திரப்பதிவில் வருது புதிய நடைமுறை.. அமைச்சர் மூர்த்தி பேசிய 3 விஷயம்
சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவுகளைப் பொறுத்தவரை, கர்நாடாகா உள்ளிட்ட பிற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்து, கருத்துகளைக் கேட்டு, புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிட இருக்கிறோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பதிவுத் துறை நடைமுறைகள், சேவைகள் தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கூடுதல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் அகில இந்திய ரியல் எஸ்டேட் அசோசியேஷன், கிரெடாய், சிஐஐ, டான்ஸ்டியா, இந்திய கட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். அப்போது ரியல் எஸ்டேட் சங்கத்தினர், அமைச்சர் மூர்த்தியிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர்.
அதாவது அண்மையில் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பொது அதிகார ஆவணக் கட்டணம் உள்ளிட்டவற்றைக் குறைக்க வேண்டும், பதிவு நடைமுறையில் திருத்தம் செய்ய வேண்டும், நில வழிகாட்டி மதிப்பு திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலத்தை பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்றும் இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் அதற்கு தீர்வு காண வலியுறுத்தினர். மேலும் பத்திரப்பதிவு மென்பொருளால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை என்று வேதனை தெரிவித்த அவர்கள், இதனால் 3 முறை டோக்கன் வாங்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்கள்.
அப்போது அவர்களின் பல்வேறு கோரிகைகளை கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி பின்னர் கூட்டத்தில் பேசும் போது, பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 திட்டம் குறித்து விரிவாக விவரித்தார். ஆள்மாறாட்டத்தை ஒழிக்க ஆதார் தரவுடன் விரல் ரேகை, கருவிழிப் படலம் சரி பார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மையக் கணினியில் ஆவணங்களைத் திருத்தம் செய்ய முடியாத வகையில் 'பிளாக்செயின்' தொழில்நுட்ப வசதி உருவாக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
கருத்து கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் மூர்த்தி. அவற்றை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
3 முக்கியமான பாய்ண்ட்: வழிகாட்டி மதிப்பு: பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் குறைந்த பதிவுக் கட்டணம், வழிகாட்டி மதிப்பு உள்ளதாக கூறிய அமைச்சர் மூர்த்தி, விரைவில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

நில மதிப்பு: அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவு குறித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, பெங்களூருவில் தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. கிராமங்களில் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.21 முதல் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இனி குறைந்தது சதுர அடி ரூ.50 என்ற அளவில் நில வழிகாட்டி மதிப்பு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடுக்குமாடி பதிவு: அடுக்குமாடிக் குடியிருப்புகள் பதிவுகளைப் பொறுத்தவரை, கர்நாடாகா உள்ளிட்ட பிற மாநில நடைமுறைகளை ஆய்வு செய்து, கருத்துகளைக் கேட்டு, புதிய நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிட இருக்கிறோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.












Click it and Unblock the Notifications