புதிய குடும்ப அட்டை வழங்குவது நிறுத்திவைப்பு.. அதுமட்டுமல்ல.. 2 வருசமாக இப்படித்தான் தர்றாங்களாம்!
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த ஜனவரி மாதம் முதல் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வரை குடும்ப அட்டை கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வரும் பலருக்கும் குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை என்றும் அரசு உடனடியாக குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாய் திருமணம் ஆனவர்கள் உடனே செய்யவேண்டிய முக்கியமான விஷயம் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிப்பது தான். ரேஷன் கார்டு இருந்தால் தான் குடும்பத்திற்கு தேவையான விலையில்லா அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பச்சரிசி போன்றவற்றை குறைந்த விலையில் பெற முடியும்.
பொது விநியோக திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு சிறப்பான முறையில் அரசு வழங்கி வருகிறது. அரசு தரும் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காரணமாக கோடிக்கணக்கான ஏழை குடும்பங்கள் பலன் அடைந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அட்டைக்கு விண்ணப்பித்த 30 நாளில் பொதுவாக ரேஷன் கார்டு (ரேஷன் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுவது வழக்கம்.
இதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்தவர்கள் தற்போது குடியிருந்து வரும் முகவரியில் புதிய குடும்ப அட்டை நகலை வெறும் ரூ.25 செலுத்தி பெற்றுவிட முடியும்.இந்த அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் ரேஷன் கார்டை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு உரிய கட்டணம் செலுத்தி பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம்ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இத்திட்டம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே புதிய ரேஷன் கார்டு வரும் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்து.
இதேபோல், நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தவர்கள், முகவரி மாறி புதியகுடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனிடையே செப்டம்பர் 15ம் தேதிக்கு பின்னர் தான் நகல் குடும்ப அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாற்றம் கோரி விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதை காரணம்காட்டி புதிய குடும்ப அட்டை வழங்கப்படாமல் உள்ளதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு உடனடியாக புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே ரேஷன் கார்டுகள் பொதுவாக பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சில வருடங்களாக பெரும்பாலும் NPHH குறியீட்டுடன் முன்னுரிமையற்ற குடும்ப அட்டையாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications