சென்னை வீடுகளுக்கு மீண்டும் வரும் கொரோனா ஸ்டிக்கர்! அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுப்பட்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு தரப்பில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் அதிகரித்த கொரோனா
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,632 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பு
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள 684 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுப்பட்டுள்ளன. இது ஒரு எச்சரிக்கை நடவடிக்கையே. அதேபோல் 5க்கும் மேற்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் தெருக்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் 5 ஆயிரம் பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்த வேண்டுகோள்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.44 கோடி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளவர். அவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களையும் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். இப்போதைக்கு சென்னையில் கடுமையில் விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஒரே தெருவில் 5 நபர்கள் மற்றும் 3 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே தீவிரமாக கண்காணிக்கிறோம். அதுமட்டுமின்றி பொதுமக்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலுடம் கூட, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications