இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பறந்த மெசேஜ்.. அமலாகும் புதிய விதிமுறை.. நோட் பண்ணுங்க
சென்னை: வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இல் பணம் குறிப்பிட்ட முறைக்குப் பிறகு எடுத்தால் அதற்கான கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம் இல் பணம் எடுப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. கூலி தொழிலாளர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரையில் தொழிலாளர்களுக்கான ஊதியமானது வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் பலரும் ஜிபே, பேடிஎம் என டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளை செய்து வந்தாலும், பெரும்பாலானோர் கையில் பணம் வைத்தே செலவு செய்து வருகின்றனர்.

பணம் தேவைப்படும் போதெல்லாம் ஏடிஎம் இல் இருந்து பணம் எடுத்து வந்த நிலையில், குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்து வந்தால் 20 ரூபாய் வரையில் கட்டணம் பிடிக்கப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து தொடர்ந்து ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
வங்கிகளில் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் விதிக்கப்படுகிறது. அதேபோல, தங்களுடைய வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை அமலில் உள்ளது.
ஏடிஎம் இல் குறிப்பிட்ட முறைக்குப் பிறகு பணம் எடுத்தால் பிடிக்கப்படும் புதிய கட்டணத்தை பெரும்பாலான வங்கிகள் கடந்த மே மாதம் முதல் செயல்படுத்தி வந்தன. இந்நிலையில், இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதிமுறைகள் குறித்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜூலை 1 ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகள், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ. 21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது. ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றியதற்காக ஏடிஎம் உள்பரிமாற்ற கட்டணங்களைச் செலுத்தும். அதற்காகத்தான் பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தனியார் வங்கிகளும் மற்ற வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதேபோல, கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் மினிமம் பேலன்ஸ் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications