தமிழகத்தில் சி.ஏ.ஏ.வை ஆதரிக்கும் வட இந்தியர்கள்... விஸ்வரூபம் எடுக்கும் வடவர் எதிர்ப்பு முழக்கம்!
சென்னை: தமிழகத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் சி.ஏ.ஏ. ஆதரவு ஊர்வலங்களில் வட இந்தியர்கள் அதிக அளவில் பங்கேற்றிருப்பது புதிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை முதல் கன்னியாகுமரி வரை பல நாட்களாக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஒரே ஒரு ஷாகின் பாக்தான்... தமிழகத்தின் ஒவ்வொரு நகரமும் ஷாகின் பாக் என்பதாக உருமாறி வருகிறது.
இந்த போராட்டங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்று போலீசாரை தமிழக பாஜகவினர் மிரட்டி வருகின்றனர். இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இந்துக்கள் களமிறங்குவார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தூண்டிவிட்டு வருகிறார்.

எச். ராஜாவின் வன்முறை பேச்சு
ஆகையால் டெல்லி கபில் மிஸ்ராவைப் போல வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக தமிழகத்தின் பல நகரங்களில் ஊர்வலங்களையும் பேரணியும் நடத்தியது. இப்பேரணிகளில் தமிழகத்தில் வாழும் வட இந்தியர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.

தலையெடுக்கும் வட இந்தியர்கள்
பாஜக ஆதரவு என்ற அடிப்படையில் அவர்கள் கலந்து கொண்டதில் பிரச்சனை எதுவும் உருவாகவில்லை .ஆனால் டெல்லி எரிந்தது போல் சென்னையும் எரியும் என்று எச்சரிக்கை விடுத்த பதாகைகளை வெறித்தனத்துடன் முழக்கமிட்டிருந்தனர் வட இந்தியர்கள். இதேபோல் பல இடங்களிலும் பாஜக ஆதரவு பேரணிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் வட இந்தியர்கள் திரண்டுள்ளனர்.

வட இந்தியர் எதிர்ப்பு போராட்டம்
இதனால் வட இந்தியர்களுக்கு எதிரான முழக்கங்கள் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வடவர் எதிர்ப்பு, பனியாக்கள் எதிர்ப்பு, மார்வாடிகள் எதிர்ப்பு என பல கட்ட போராட்டங்கள் தந்தை பெரியார் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அமைதிவழியில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது சி.ஏ.ஏ.வுக்கு எதிராக இந்த மண்ணின் மக்கள் போராடுகிறார்கள்.

அமைப்புகள் எச்சரிக்கை
அப்படியான நிலையில் போராடுகிற இந்த மண்ணின் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் வட இந்தியர்கள் முழக்கம் எழுப்பியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடவர் எதிர்ப்பு பிரசாரத்தையும் போராட்டங்களையும் மீண்டும் முன்னெடுக்க நேரிடும் என்று திராவிடர் இயக்கங்களும் தமிழர் அமைப்புகளும் ஒருசேர எச்சரிக்கை விடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications