திருமணம் முடிந்த கையோடு நீட் விலக்கு உண்ணாவிரத போராட்டத்தில் புதுமண தம்பதிகள்! சென்னையில் நெகிழ்ச்சி
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் நீட் எதிர்ப்பு பதாகையை ஏந்தி பங்கேற்றனர்.
இன்று தமிழகத்தில் முக்கியமாக இரு விஷயங்கள் நடந்து வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதை அடுத்து நடைபெறும் மதுரை மாநாடு. மறுபுறம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் 720க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள், அவர்களுடைய பெற்றோரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து எண்ணித் துணிக என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் அவர்களை பாராட்டினார்.
இந்த நிகழ்வில் சேலம் மாணவியின் தந்தை ஒருவர் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு எப்போது விலக்கு கிடைக்கும் என ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநரோ நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கொடுக்க முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்தால் தமிழகத்தில் மாணவர்கள் போட்டியிடும் திறனை இழந்துவிடுவார்கள். இது மாணவர்களுக்கு செய்யும் அநீதியாக மாறிவிடும்.
எனவே நீட்தேர்விலிருந்து கட்டாயம் விலக்கு அளிக்க முடியாது என்றார். அதற்கு அந்த தந்தை நீட் தேர்வுக்கு முன்னரே தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளும் மருத்துவர்களும் சிறப்பாகத்தானே செயல்பட்டார்கள் என கேள்வி எழுப்பினார். அதை ஆளுநர் மறுத்த நிலையில் அவரை உட்காருங்கள் என கூறிவிட்டார். ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் அவரிடம் இருந்து மைக்கை பெற்றுக் கொண்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் திமுக அரசு- ஆளுநர் மாளிகை இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கண்டனங்களை எழுப்பினர். அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும். ஆளுநர் அரசியல் பேச கூடாது என விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. திமுகவின் மருத்துவரணி, மாணவரணி, இளைஞர் அணி சார்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்னர். மதுரையில் அதிமுக மாநாடு இருப்பதால் அங்கு தவிர மற்ற மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
சென்னையில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி, எம்பி தயாநிதிமாறன், எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் முதலில் நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களை போல் முகமூடிகள் செய்யப்பட்டு திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த முகமூடிகளை அணிந்து கொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறார்கள். இறந்த அனிதா முதல் அண்மையில் இறந்த ஜெகதீஸ்வரன் வரை அவர்களுடைய புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்ட ஜோடி தங்கள் திருமணம் முடிந்த கையோடு திமுக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு அனிதாவின் புகைப்படம் அடங்கிய இளைஞரணி சார்பில் தயார் செய்யப்பட்ட பதாகைகளை ஏந்தியுள்ளனர். மேலும் நீட் தேர்வை தடை செய்யுங்கள் என கோஷமிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications