Orange Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் மழை விடாது.. நெல்லை, குமரிக்கும் அலர்ட்.. ஐஎம்டி
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுபோக நெல்லை, தூத்துக்குடி, குமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 27 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தமிழகத்தை ஆட்டம் காண வைத்தது. தென் மாவட்டங்கள் முதல் சென்னை வரை பரவலாக கனமழை பெய்தது. புயல் வலுவிழந்தாலும் கூட தமிழகத்தில் இன்னும் மழை கொட்டி வருகிறது.

அடுத்த 3 மணி நேரம்
அந்த வகையில் தான் அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடிக்கும் அலர்ட்
இதேபோல் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, குமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நெல்லையில் திடீரென மாறிய கிளைமேட்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் இன்று பெரிய அளவில் மழை இன்றி வெயில் அடித்து வந்தது. இன்று பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கிளைமே மாறியது. மாலை 4 மணியளவில் கரு மேகங்கள் திரண்டு இருளாக காட்சியளித்தது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில் தற்போதும் ஒரு சில இடங்களில் கொட்டி வரும் மழையால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நாளை எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications