சென்னையில் தங்கிய ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு ஆசாமிகள்! மண்ணடியில் என்ஐஏ ரெய்டு
சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள இரு வீடுகளில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அவ்வப்போது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் சென்னை மண்ணடி பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அது போல் முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒருவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் சக்தி திறன் குறைந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இதில் 10 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தொப்பி மஃப்ளர் அணிந்த நபர் ஒருவர் ஒரு கார்னரில் உட்கார்ந்து ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு பையை அங்கேயே வைத்துவிட்டு செல்கிறார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து அந்த பையில் இருந்த குண்டு வெடித்தது. இதனால் கடையின் முன் பகுதி சேதமடைந்தது.
இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக சபீர் என்பவர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதில் ஷிமோகாவை சேர்ந்த இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது. அது போல் மஃப்ளர் ஆசாமி அணிந்திருந்த தொப்பியும் சென்னை சென்ட்ரல்லில் வாங்கியது.












Click it and Unblock the Notifications