விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆயுதப்படை காவலர்! கிண்டியில் திடீர் ஆய்வு.. அதிரடி காட்டிய என்ஐஏ
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பு என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆயுதப்படை காவலர் ஒருவரை விசாரணைக்காகவும் அழைத்து சென்றிருக்கின்றனர்.
சென்னை கிண்டி சர்தார்படேல் சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் மாதம் 26ம் தேதியன்று மதியம் சுமார் 2.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஆளுநர் மாளிகை முதலாவது நுழைவு வாயில் எதிரே மர்மநபர் ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அவரை விசாரிப்பதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த இரண்டு பாட்டில்களை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியிருக்கிறார் அந்த மர்ம நபர்.

இந்த பாட்டில்கள், மாளிகையின் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பக்கத்தில் விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது. போலீசார் உடனே தீயை அணைத்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒப்படைத்தனர். கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால்தான் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இவர் ஏற்கெனவே கடந்த 2022ம் ஆண்டு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போதும் குண்டு வீச்சில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், பலர் பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவான அறிக்கையை வெளியிட்டது.
பின்னர் இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே என்ஐஏ அதிகாரிகள் கிண்டி ஆளுநர் மாளிகையின் முன்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 8 அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்ட நிலையில், சம்பவத்தின்போது பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வானுவை விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்து சென்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications