நாகையில் 2-வது நாளாக முகாம்: மேலும் 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!
சென்னை: இலங்கையில் ஈஸ்டர் நாளில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று நாகையில் 2-வது நாளாக 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இலங்கை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட கோவை முகமது அசாருதீன், சேக் ஹிதயதுல்லா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கொச்சி சிறையில் இருந்த இவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் கோவை உட்பட 6 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் உக்கடம் சமீர், லாரிப்பேட்டை சவுகர்தீன் ஆகியோர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
(கோவை உட்பட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை )
இதையடுத்து இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி விடுவித்தனர். நாகூர் அருகே சண்ணமங்கலத்தில் அஜ்மல் என்பவர் வீட்டுக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர் உறவினர் வீட்டில் இருந்ததால் அங்கு சென்று சோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் அஜ்மலிடம் விசாரணை நடத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காயல்பட்டினம் அபுல்ஹசன் சாதுலி, திருச்சி இனாம்குளத்தூர் சாகுல்அமீது, இளையான்குடி சிராஜூதீன் ஆகியோர் வீடுகளிலும் இதேபோல் சோதனைகள் நடத்தப்பட்டன. இவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தீவிரவாதிகள் அசாருதீன் மற்றும் சேக் இதயதுல்லா ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இது தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை நடத்தி இருக்கின்றனர். நேற்றைய சோதனையின் போது 2 லேப்டாப்கள், 8 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் மற்றும் 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்த 6 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர்.
நாகையில் மேலும் 4 பேர்?
இதனிடையே நாகப்பட்டினத்தில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். சண்ணமங்கலம் அஜ்மல் என்பவரை சென்னைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அஜ்மலின் நண்பர்கள் 4 பேரிடம் நாகை காவல்நிலையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications