கவரைப்பேட்டை ரயில் விபத்து: சதிவேலையால் 95 இணைப்பு கம்பிகள் அகற்றமா? என்.ஐ. ஏ. விசாரணையால் பகீர்!
சென்னை: தமிழ்நாட்டின் சென்னை அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது ஆகியவற்றின் பின்னணியில் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் ஆந்திரா மாநிலம் கூடுரை நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்று முன்தினம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ரயில் பெட்டிகள் சிதறிக் கிடந்த அலங்கோலம் பார்ப்பவர் நெஞ்சை திடுக்கிட வைக்கும்.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 1700 பயணிகள் பயணித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து சிதறிக்கிடந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் ரயில் விபத்தைப் போல நிகழ்ந்த கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-ன் அதிகாரிகளும் நேற்று விசாரணையைத் தொடங்கினர். மனித தவறுகளால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் சதிவேலைகள், நாசவேலைகள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் களமிறக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில் சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து சென்றுள்ளனர். கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications